திருச்சி: திருச்சி, பெரம்பலூர், கரூர், புதுகை மாவட்டங்களில் நேற்று மாலை சூறை காற்று, இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. தமிழகத்தில் நாளை(4ம் தேதி) முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பே வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் நேற்று மாலை முதல் இரவு வரை சூறைகாற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பெரம்பலூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் நகரில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் கிழிந்தும், உடைந்து விழுந்தன. ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. அதேபோல் கரூரில் நேற்று மாலை 5.30 மணி முதல் பலத்த காற்று, இடி, மின்னலுடன் அரைமணிநேரம் பலத்த மழை பெய்யதது. கிருஷ்ணராயபுரம், தோகைமலை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழைபெய்தது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை ஒருமணி நேரமாக பெய்தது.
திருச்சியில் மாலை இடி மின்னல், சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் திருவெறும்பூர், லால்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தது. அடிக்கடி மின்சாரம் தடைபட்டது. தஞ்சையில் நேற்று மாலை இடி, மின்னலடித்தது. ஆனால் மழை இல்லை. இதேபோல் நாகை, திருவாரூர் பகுதிகளிலும் மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த கோடை மழை தற்போது விதைத்துள்ள எள், வெங்காயம், உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
