கொள்கை எதிரி என்று சொன்னவர் பாஜவுக்கு எதிராக விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை: திருமாவளவன் பேச்சு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது: நம்முடைய கட்சியின் சார்பில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், தேர்தல் பணிக்குழு நியமனம் செய்யப்பட்டு, ஆங்காங்கே தோழர்கள் தொகுதி வாரியாக கட்டுக்கோப்பாக இருந்து பணியாற்றி இருக்கிறார்கள். ஒரு சில தொகுதிகளை தவிர, தேர்தல் பணியாற்றியதில் ஒரு சில தொகுதிகளில் இருந்து தோழர்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்றவில்லை, விசிக போட்டியிடாத தொகுதிகளில் ஒரு சில இடங்களில், விசிகவினர் கூட்டணி கட்சியினருக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஒரு சில தொகுதிகளில் சிறப்பாக பணியாற்றியதாக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் எனக்கு நன்றி தெரிவித்தனர்.  திமுக, அதிமுக திராவிட கட்சிகளுக்கு எதிரான கருத்து, எதிர்ப்பு வாக்குகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. இதை ஒவ்வொரு தேர்தலிலும் புதிதாக மாற்று என்று வருபவர்கள் பெறுவார்கள். இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக இருந்தவர்கள் அனைவருக்கும் திமுக மற்றும் கூட்டணி எதிர்ப்புதான் முதன்மையான அரசியல்.

இந்த தேர்தலில் வெற்றிபெற தவெக விஜய்க்கு வாய்ப்பு இல்லை. திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்குகளை மட்டுமே விஜய் பெருவாரியாக பிரித்துக்கொள்வார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. திமுக அரசு பெண்களை மையப்படுத்திச் செயல்படுத்திய திட்டங்களும் சாதகமாக இருந்தது. இந்த கூட்டணி கொள்கைப் பிடிப்புள்ள கூட்டணி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதும் இந்த கூட்டணியின் வெற்றிக்குக் காரணம்.

திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என நினைத்தவர்கள் முதலில் விசிகவை பிரிக்கவே முயற்சி செய்தனர். இதன் காரணமாகவே விசிகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என அனைத்து நடவடிக்கையிலும் விமர்சனம் வைத்தார்கள். அவர்களின் நோக்கம் நிறைவேறாததால் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நான் போட்டியிடலாம், போட்டியிட வேண்டாம் என்ற இரண்டு கருத்துகளுடன் இருந்தேன்.

நான் போட்டியிட முடிவெடுத்ததும், பிறகு அதில் இருந்து விலகியதும் விமர்சனத்திற்கு உரியதுதான். அதற்கான காரணங்களை நிர்வாகிகளிடம் விளக்கிவிட்டேன். விஜய் பாஜ எங்கள் கொள்கை எதிரி என்று சொன்னார். ஆனால், அதற்குப் பிறகு ஒருவார்த்தை கூட பாஜவுக்கு எதிராக அவர் பேசவில்லை.

அவருடைய நோக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்பது மட்டும்தான். அந்த ஆட்சியை அகற்றிவிட்டால் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது அவருக்குப் பிரச்னை இல்லை. பாஜ அங்கம் வகிக்கும் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் அவருக்கும் பிரச்னை இல்லை. அந்த நோக்கில்தான் அவர் செயல்படுகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: