நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆலயத்தில் தரிசனம் செய்ய விஜய் வர உள்ளதாக தகவல் வெளியானதால் வேளாங்கண்ணி பேராலயத்தில் அதிகாலை 3 மணிக்கே குவிந்த தவெக தொண்டர்கள், ரசிகர்கள் காம்பவுன்ட் சுவர், சாரங்களில் ஏறி ரகளையில் ஈடுபட்டதால் பிரார்த்தனைக்கு வந்தவர்கள் அவதிக்குள்ளாகினர். தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கிய தவெக 233 தொகுதிகளில் போட்டியிட்டது.
வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் தங்கள் கட்சி வேட்பாளர்கள், தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி விஜய் கோயில், தேவாலயம் சென்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு கையில் வேலுடன் சென்ற விஜய், அதிகாலையில் நடந்த விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து மறுநாள் மராட்டிய மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
இந்நிலையில் தனது ஆன்மிக பயணத்தின் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு விஜய் இன்று அதிகாலை வருகை தர உள்ளதாக தகவல் பரவியதால் வேளாங்கண்ணி பேராலயத்தில் அதிகாலை 3 மணி முதல் தொண்டர்கள், ரசிகர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். 5 மணிக்கு பேராலயம் திறக்கப்பட்டு 5.40 மணிக்கு முதல் திருப்பலி நடைபெறுவது வழக்கம். ஆனால் 5 மணிக்கு பேராலயத்தை திறந்தபோது தவெக ரசிகர்கள் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
மேலும், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பேராலயத்தின் சுற்றுச்சுவர்களில் ஏறி குதித்து ஆலயத்துக்குள் வந்தனர். சிறுவர்கள், சிறுமிகள் முகப்பிலிருந்த செருப்பு ஸ்டாண்டுகளிலும், பேராலய முகப்பு கட்டிடத்தில் பழுதுபார்ப்பு பணிக்காக கட்டப்பட்டிருந்த சாரத்திலும் ஏறி நின்றும், பேராலயத்துக்குள்ளும் ஜன்னல்கள், சுவர்களில் ஏறி நின்றும் அத்துமீறல்களில் ஈடுபட்டனர். இதனால் வழிபாட்டுக்கு வந்த இறைமக்கள் பேராலய ஊழியர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
பலி பீடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அமர்ந்தபடி தவெக, டிவிகே, விஜய் என கூச்சலிட தொடங்கினர். இதையடுத்து பேராலய நிர்வாகத்தினர் காலை 5.15 மணி அளவில் ஒலிபெருக்கி மூலம், நடிகர் விஜய் வருவதாக இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. வழிபாட்டுக்கு இடையூறு செய்யாதீர்கள், அப்படி அவர் ஒருவேளை வந்தால், அவருடன் நீங்களும் பிரார்த்தனையில் கலந்துகொள்ளலாம். திருப்பலி நடத்த ஒத்துழைப்பு அளிக்கும்படி அறிவுறுத்தினர்.
அதன்பின்னரே ரசிகர்களும், தவெக தொண்டர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்தக் களேபரங்களுக்கு இடையே அதிகாலை 5.40 மணிக்கு திருப்பலி வழக்கம்போல் நடந்தது. ஆனால் நாகூரில் தொண்டர்கள், ரசிர்கள் குறைந்த எண்ணிக்கையிலே நின்றனர். இதனால் இடையூறின்றி அங்கு தொழுகை நடந்தது.
இதுகுறித்து காவல்துறை சார்பில், விஜய் வேளாங்கண்ணி, நாகூர் வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் காவல்துறைக்கு வரவில்லை. எனினும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விஜய் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு போலீசார் திரும்ப அழைத்து கொள்ளப்பட்டனர். எனவே போதிய பாதுகாப்பு இல்லை என தவெக சார்பில் கூற முடியாது என தெரிவிக்கப்பட்டது.
* விஜய் ஏமாற்றியதால் மனஉளைச்சலான மாணவி
நாகப்பட்டினம் பிரதாமராமபுரத்தை சேர்ந்த சன்சிகா (16), நண்பர்களுடன் விஜய்யை பார்க்க வந்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது: நாங்கள் ஸ்கூலுக்கு கூட 4 மணிக்கு புறப்பட்டு சென்றது இல்லை. ஆனால் எங்கள் அண்ணன் விஜய்யை பார்க்க 4 மணிக்கு எல்லாம் புறப்பட்டு வேளாங்கண்ணி வந்தோம். ஆனால் அண்ணன் எங்களை ஏமாற்றி விட்டார். அண்ணன் வருகை தராமல் போனது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.
* புஸ்ஸி ஆனந்த் வருகை
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா ஆகிய வழிபாட்டு தலங்களில் விஜய் வழிபாடு நடத்த உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு புஸ்ஸி ஆனந்த் மதியம் 1.25 மணிக்கு வந்து வழிபாடு செய்து விட்டு சென்றார்.
* பேக்கை தொலைத்து கதறி அழுத பெண்
விஜய்யை பார்ப்பதற்காக கூட்டத்தில் முண்டியடித்து பேராலயம் உள்ளே சென்ற ஒரு பெண், தனது ஹேண்ட் பேக்கை காணாததால் கதறி அழுதபடி நின்றார். அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி பேக்கிலிருந்த அவரது செல்போனுக்கு போன் செய்தபோது எதிர்முனையில் பேசியவர் கீழே கிடந்த ஹேண்ட் பேக்கை எடுத்து வைத்திருப்பதாக கூறினார். பின்னர் அந்த பெண் அங்கு சென்று பேக்கை அவரிடம் இருந்து வாங்கிக்கொண்டார்.
