மீனா முத்தையா மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி மீனா முத்தையா மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். கலைச்சேவை, கல்விச் சேவை இரண்டையும் தமது வாழ்வின் இருபெரும் லட்சியங்களாகக் கொண்டு வாழ்ந்த பெருமைக்குரியவர் மீனா முத்தையா.  தஞ்சாவூர் கலைக்குப் புத்துயிர் கொடுத்து, அதற்காகவே குமார ராஜா முத்தையா கலை மற்றும் கைவினைக் கலைப் பள்ளியின் மூலம் பயிற்சியும் அளித்து வந்த அவரது பணிகள் என்றென்றும் நினைவுகூரப்படும்.

தனிப்பட்ட முறையிலும் எங்களது குடும்பத்துடன் இனிய நட்புறவைப் பேணி வந்த அவர், எனது துணைவியாரின் நூல் வெளியீட்டு விழாவிலும் 2018-ம் கலந்துகொண்டு உரையாற்றியதை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். மீனா முத்தையா மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல மீனா முத்தையா மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: