கல்லட்டி சாலையில் போக்குவரத்து தடையால் கூடலூரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்

*மாற்றுப்பாதைகள் அமைக்க கோரிக்கை

கூடலூர் : மசினகுடி, கல்லட்டி வழியாக ஊட்டி செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் மசினகுடி வியாபாரிகள் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் பாதிப்படைந்துள்ளனர். அனைத்து வாகனங்களும் கூடலூர் வழியாக செல்வதால் கூடலூர் நகரில் வாகன போக்குவரத்து அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கூடலூர்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் இருந்து மசினகுடி கல்லட்டி வழியாக ஊட்டிக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. தெப்பக்காட்டில் இருந்து ஊட்டி வரை சுமார் 37 கி.மீட்டர் தூரம் உள்ள இந்த சாலையில் சீகூர் பாலம் முதல் தலைக்குந்தா வரை 12.5 கி.மீட்டர் மலைப்பாதையாக உள்ளது.

கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்த இந்த சாலையில் ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் இருபுறமும் அனுமதிக்கப்பட்டு வந்தன. கடந்த சில வருடங்களுக்கு முன் அவ்வப்போது சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி சில சுற்றுலா பயணிகள் இறந்ததால் ஊட்டியில் இருந்து கல்லட்டி சாலை வழியாக மசினகுடி, முதுமலை மற்றும் கர்நாடகா பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பெரும்பாலான வாகனங்கள் நடுவட்டம் கூடலூர் வழியாக இயக்கப்படுகின்றன.

ஆனால், தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி கல்லட்டி வழியாக ஊட்டிக்கு மேல் நோக்கி செல்லும் வாகனங்கள் செல்லலாம் என அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கல்லட்டி சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், காவல்துறையினர் தெப்பக்காடு பகுதிதியிலிருந்து மசினகுடி செல்லும் சாலையில் தெப்பக்காடு பாலம் பகுதியில் பேரிகார்ட் அமைத்து அந்த வழியாக ஊட்டி செல்லும் வாகனங்களை கூடலூர் வழியாக திருப்பி விட்டு வருகின்றனர். இதனால், தற்போது கூடலூர் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உள்ளது.

மசினகுடி கல்லட்டி சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்ல ஒரு வழிப்பாதையாக இருந்த போதே கூடலூர் நகரில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக உள்ளூர் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வந்துள்ளனர். மேலும் கேரளா, கர்நாடக சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நகருக்குள் வராமல் செல்ல மாற்று பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றனர்.

தற்போது, இந்த சிக்கல் மேலும் அதிகரித்து உள்ளது.இந்நிலையில், மசினகுடி கல்லட்டி சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை அனுமதிக்காததால் மசினகுடி நகரில் உள்ள வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் வரவால் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வந்த ஜீப் சபாரி வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலாவை நம்பி உள்ள பிற தரப்பினரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மசினகுடி பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த கட்டுப்பாடுகளை கண்டு கொள்ளாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

வனத்துறையின் தொடர்ச்சியான பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளால் மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் பல்வேறு வகையிலும் புறக்கணிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வருவதாகவும், தற்போது மசினகுடிக்கு வரும் சுற்றுலா பயணிகளை தடுக்கும் நடவடிக்கைகள் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கள்ளட்டி மலைச்சாலையில் புதிய கட்டுப்பாடுகளால் கூடலூர் நகரில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும் உள்ளூர் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிப்படையாத வகையிலும் மாற்றுப் பாதைகளுக்கான திட்டத்தை மாவட்ட நிர்வாகம் அரசு முன்னெடுக்க வேண்டும் என இப்பகுதி வாகன ஓட்டிகள் பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: