வேடசந்தூர், மே 1: வேடசந்தூர் மைனர் காலனியை சேர்ந்தவர் தங்கவேல் (53). இவரது மனைவி மாலதி (45). இருவரும் கடந்த மாதம் 24ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று, எதிர்வீட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவர், தங்கவேலு வீட்டின் கதவு உடைக்கபட்டிருந்ததைக் கண்டு வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி, எஸ்.ஐ.ஜெயலட்சுமி மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து வீட்டை சோதனை இட்டனர். அதில் தங்கவேல் கொடுத்த தகவலின் படி அவர் ரகசிய இடத்தில் வைத்திருந்த 50 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடு போகாமல் அப்படியே இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு செல்பவர்கள் முறையாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
