விருதுநகர், மே 6: விருதுநகரின் முக்கிய பிரதான சாலைகளில் இருபுறமும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். விருதுநகரில் மதுரை பிரதான சாலை, ராமமூர்த்தி சாலை, ரயில்வே பீடர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் உள்ளன. இந்த நிலையில் இந்த சாலைகளில் கனரக வாகனங்கள் மற்றும் டூவீலர்கள் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக தேசபந்து மைதானப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் வாகனங்கள் நிறுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.
அதே நேரம் பஜார் பகுதியில் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் மற்றும் டிரைசைக்கிள்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால் பஜார் பகுதியை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்றும், மீனாம்பிகை பங்களா பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மாவட்ட காவல் துறையை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
