அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு ஐயங்குளத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி

திருவண்ணாமலை, மே 1: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவின் நிறைவாக ஐயங்குளத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் திகழும் அண்ணாமலையார் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் மிகவும் சிறப்புமிக்கது. அதன்படி, சித்திரை வசந்த உற்சவம் கடந்த 19ம் தேதி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் மூகூர்த்தத்துடன் விமரிசையாக தொடங்கியது. அப்போது, சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது.

விழாவின் தொடர்ச்சியாக, கடந்த 20ம் தேதி முதல் தினமும் அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் சேடி பெண்கள் சுவாமிக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், தினமும் இரவு நேரத்தில் சுவாமிக்கு மண்டகபடியும் செலுத்தப்பட்டது. விழாவின் நிறைவாக, ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. அப்போது, அலங்கார ரூபத்தில் அண்ணாமலையார், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதைத்தொடர்ந்து, நேற்று இரவு கோபால விநாயகர் கோயிலில் மண்டகபடியும் நடந்தது. மேலும், அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாதத்தில் மன்மத தகனம் நிகழ்ச்சி நேற்று இரவு 11 மணி அளவில் நடந்தது. சிவாலயங்களில் மன்மத தகனம் நடைபெறும் சிறப்பு திருவண்ணாமலை கோயிலுக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: