சென்னை: தமிழக அரசின் சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் இன்று விருப்ப ஓய்வு பெறுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தியதில் இவரது பங்களிப்பு சிறப்பானதாகும். குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்தான உணவு ‘மெனு’ பட்டியலை இவர்தான் தயாரித்து வழங்கினார். இந்த திட்டம் குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
2002 பேட்ஜ் அதிகாரியான ஜெயஸ்ரீ முரளிதரன், 2027ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வுபெற இருந்த நிலையில், தற்போது 9 மாதங்களுக்கு முன்னதாகவே விருப்ப ஓய்வில் செல்ல தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார். இதற்கு அரசின் அனுமதி கிடைத்துள்ளதால் 30ம் தேதியுடன் (இன்று) அவர் விருப்ப ஓய்வில் செல்ல உள்ளார். சொந்த காரணங்களுக்காக அவர் விருப்ப ஓய்வில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் டிவிஎஸ் குழுமத்தில் அவர் ஒரு முக்கிய பொறுப்பை ஏற்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐஏஎஸ் அதிகாரியான ஜெயஸ்ரீ முரளிதரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய அதிகாரியாக திகழ்ந்தார். ஜெயலலிதாவின் பதவி காலத்தில் ஜெயஸ்ரீ கூடுதல் செயலாளராக பணியாற்றினார். அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனி செயலாளராக பணியாற்றினார். எடப்பாடி பெயரில் வெளியாகும் செய்திகளை இவர்தான் சரிபார்த்து ஊடகங்களுக்கு அனுப்பி வைப்பார்.
ஜெயஸ்ரீ முரளிதரன் 2011ம் ஆண்டு முதல் 2014 வரை திருச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். 2011ல் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் அங்கு கலெக்டராக இருந்ததால் பழக்கம் அதிகமானது. அதன்பிறகுஸ்ரீரங்கம் தொகுதிக்கு ஜெயலலிதா கொண்டு வந்த பல திட்டங்களை முன்னின்று செயல்படுத்தி அவரிடம் நற்பெயர் பெற்றவர். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர், டிட்டோ இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
