×

தீவிரவாதத்தை போதிக்கும் பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் நற்சான்றிதழ் தந்தது தேசவிரோதம்: காங்கிரஸ் கடும் தாக்கு

புதுடெல்லி: “தீவிரவாதத்தை போதிக்கும் பாகிஸ்தானுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் நற்சான்றிதழ் தந்தது தேசவிரோதம்” என காங்கிரஸ் சாடி உள்ளது. கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பேசிய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “அரசு ஆதரவுடனான எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கவனத்தில் இருந்து இழக்க கூடாது. இந்த அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதில் எந்த இரட்டை நிலைப்பாட்டுக்கும் இடமில்லை” என்றார். தீவிரவாத மையங்கள் இனி தண்டனையில் இருந்து விடுபடாது என்பதற்கு இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் அதற்கு எடுத்துக்காட்டு” என பேசியிருந்தார். (ஆனால் அவர் நேரடியாக பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடவில்லை. )

இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமரின் ஒப்புதல் மற்றும் தூண்டுதலுடன், பிஷ்கெக்கில் பேசும்போது, பாகிஸ்தானுக்கு வெட்கக்கேடான முறையில் நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையமாக இல்லையா? இந்தியாவை குறி வைத்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாத மையங்கள் பாகிஸ்தானில் இல்லையா? பாகிஸ்தானில் இந்திய எதிர்ப்பு சித்தாந்த பயிற்சி இல்லையா? மும்பை, காஷ்மீரின் பஹல்காமில் திட்டமிட்டு பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படவில்லையா? பாகிஸ்தான் தொடர்பான இந்த புதிய நிலைப்பாடு, அமெரிக்காவை திருப்திப்படுத்துவது மற்றும் சீனாவிடம் சரணடைதல் ஆகியவற்றில் பிரதமர் மோடியின் கொள்கையின் ஒருபகுதியாகும். பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு அமைச்சர் கொடுத்துள்ள நற்சான்றிதழ், கடந்த 2020 ஜூன் 19ல் சீனாவுக்கு பிரதமர் மோடி வழங்கிய விநோதமான நற்சான்றிதழ் போல தேச விரோதமானது. வெட்கக்கேடானது” என கேள்விகளுடன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

Tags : Rajnath Singh ,Pakistan ,Congress ,New Delhi ,Minister ,Shanghai Cooperation Organisation ,Bishkek, Kyrgyzstan ,Union Defence Minister ,
× RELATED 4ம் காலாண்டில் அதானி போர்ட்ஸ் லாபம் ரூ. 3,329 கோடி