×

வளர்ச்சி என்ற பெயரில் பேரழிவு அந்தமான் நிகோபார் திட்டம் இயற்கைக்கு எதிரான பெருங்குற்றம்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

ஸ்ரீ விஜயபுரம்: “ஒன்றிய அரசின் அந்தமான் நிகோபார் திட்டம் இயற்கைக்கு எதிரான பெருங்குற்றம்” என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் உள்ள கேம்பல் விரிகுடாவில் கிரேட் நிகோபார் தீவு உள்ளது. இந்த தீவை சர்வதேச வர்த்தக மற்றும் ராணுவ மையமாக மாற்றும் வகையில் ஒன்றிய அரசு ரூ.81,000 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதில், சர்வதேச சரக்கு பெட்டக முனையம், ராணுவம் மற்றும் சிவில் பயன்பாட்டுக்கான நவீன விமான நிலையம், ஒருங்கிணைந்த குடியிருப்பு பகுதிகள், மின் உற்பத்தி நிலையம் ஆகியவை அடங்கும். இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 26ம் தேதி முதல் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சுற்று பயணம் சென்றுள்ளார். அங்கு கிரேட் நிகோபார் திட்டம் நடைபெறும் பகுதியை ராகுல் காந்தி நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து இந்த திட்டத்துக்கு எதிராக பழங்குடியின தலைவர்களை சந்தித்து பேசினார். பின்னர் இந்த திட்டம் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தன் எக்ஸ் பதிவில், “இன்று(நேற்று) கிரேட் நிகோபார் முழுவதும் பயணம் சென்றேன். இவை என் வாழ்நாளில் நான் இதுவரை கண்டிராத மிகவும் அசாதாராண, வியக்கத்தக்க காடுகள். நினைவுகளுக்கும் அப்பாற்பட்ட மிகவும் பழமை வாய்ந்த மரங்கள். பல தலைமுறைகளை கடந்து வளர்ந்த காடுகள். இங்குள்ள ஆதிவாசி சமூகத்தினரும், குடியேறியவர்களும் அதேஅளவுக்கு அழகுடையவர்கள். ஆனால் அவர்களின் உரிமைகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. அரசாங்கம் இங்கு செய்வதை வளர்ச்சி திட்டம் என்கிறது.

ஆனால் இது 160 சதுர கிமீ மழைக்காடுகளில் லட்சக்கணக்கான மரங்களை வெட்டி அழிக்கும் திட்டம். வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் பேரழிவு. கோடாரிகளுக்கு குறி வைக்கப்பட்ட லட்சக்கணக்கான மரங்கள். இது நம் வாழ்நாளில் கண்டிராத, இந்த நாட்டின் இயற்கை மற்றும் பழங்குடியினத்துக்கு எதிரான மிகப்பெரிய மோசடி, பெரும் குற்றங்களில் ஒன்று. இந்த தீவில் வசிக்கும் ஒவ்வொருவரும் இந்த திட்டத்துக்கு எதிரானவர்கள். இது தடுக்கப்பட வேண்டும். நான் கண்ட உண்மையை ஒவ்வொரு இந்தியரும் கண்டால் அது சாத்தியமே. மேலும், இந்த பிரச்னையை நான் நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Tags : Andaman ,Nicobar ,Rahul Gandhi ,Sri Vijayapuram ,Lok ,Sabha ,Andaman and Nicobar ,Union Government ,Great Nicobar Island ,Campbell Bay ,Union Territory ,
× RELATED பல்வேறு களேபரத்துடன் 2ம் கட்ட...