×

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் வெள்ளத்தில் குலுங்கிய தூங்கா நகரம்!

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை தொடர்ந்து, இன்று கோலாகலமான தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர்களில் மீனாட்சி அம்மனும், சுவாமியும் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று காலை வெகு சிறப்பாக நடந்தது. திருக்கல்யாணத்திற்காக கோயில் வளாகத்திற்குள் வடக்கு – மேற்கு ஆடி வீதிகள் சந்திப்பில் ரூ.35 லட்சம் செலவில், 10 டன் எடையுள்ள பல வண்ண பூக்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நேற்று காலை 8.54 மணிக்கு மிதுன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் நாதஸ்வரம் இசைக்க மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்பகுதியிலும், கோயில் வளாகத்திலும் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் திருமணக் கோலத்தில் இருந்த சுவாமி – அம்மனை தரிசித்து வணங்கியதுடன், பெண்கள் தாங்கள் அணிந்திருந்த தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டனர். ஏராளமான பெண்கள் புதிய மங்கல நாண் அணிந்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு மேல் சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து வழிபட்டனர். சித்திரை திருவிழா தேரோட்டத்தால் மதுரையே விழாக்கோலம் பூண்டது.

Tags : Madurai Meenadashi ,Amman Temple ,Chitri Festival ,Meenadashi Amman ,Sundareswarar Thirukkalyana ,Madurai Chitra Festival ,Golakalakala Therotam ,Masi ,Meenakshi Amman ,Swami ,
× RELATED மேற்குவங்க 2-ஆம் கட்ட தேர்தல் –...