சென்னை: இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவு:
மகத்தான சாதனை. திராவிட மாடல் ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது, திராவிட நாயகன் மு.க.ஸ்டாலினின் அரவணைப்பில் வளரும் நம் தமிழ்நாடு!. இது சாதாரண வளர்ச்சி அல்ல, திட்டமிட்ட முன்னேற்றம் என்பதையே இது நிரூபிக்கிறது. இதுவே அனைவரையும் உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட திராவிட மாடல் வளர்ச்சி. இதில் முக்கிய தகவல் என்னவென்றால், இந்திய அளவில் இது அதிகம் என்பதை கடந்து, ஏற்கனவே உயர்ந்து இருக்கும் ஒரு மாநிலம் இவ்வளவு வேகத்தில் வளர்வது உலக அளவிலும் அரிது!
இது சாதாரணமாக கிடைத்த வளர்ச்சி அல்ல. உழைப்பு உழைப்பு உழைப்பு மிகக்கடின உழைப்பினால் கிடைத்த வெற்றி. திமுக ஆட்சியின் முந்தைய காலங்களிலும் இதேபோன்ற வலுவான வளர்ச்சி பதிவாகியுள்ளது. தொடர்ந்து 15, 20 ஆண்டுகள் இப்படியான வளர்ச்சி நடந்தால், சீனா, தென் கொரியா போன்ற வளர்ச்சி இங்கேயும் நிச்சயம் சாத்தியம் தான்! 2030க்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை உறுதியாக தனது கையில் எடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும். இந்த பாதையை வலுப்படுத்தி, முதலீடு, தொழில், வேலைவாய்ப்பு வளர்ச்சியை முன்னெடுத்து வரும் திராவிட நாயகனின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது! தமிழ்நாடு வளர்கிறது. தமிழ்நாடு வழிகாட்டுகிறது. தமிழ்நாடு தொடர்ந்து வெல்லும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
