சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. நியூசிலாந்திற்கான இந்திய ஏற்றுமதியில் 8,000க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கிறது. இந்தியாவில் ஜவுளி, தோல், காலணிகள், ரத்தினக் கற்கள், பொறியியல் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற துறைகள் மேம்படும். இந்த ஒப்பந்தத்தால் நியூசிலாந்து சந்தையில் 8,284 இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு கிடைக்கிறது.
நியூசிலாந்து, இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.1.88 லட்சம் கோடி) முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை 5 பில்லியன் டாலராக உயர்த்துவதே இந்த ஒப்பந்தத்தின் இலக்காகும். மிக முக்கியமாக இந்திய விவசாயத்துறையை பாதுகாக்க பால் பண்ணை, சர்க்கரை மற்றும் சில விவசாய பொருட்கள் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே நிலையான மற்றும் விதிகள் அடிப்படையிலான வர்த்தகத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
எனவே இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமானது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமாகும். ஒன்றிய அரசு தொடர்ந்து நாட்டை பொருளாதார ரீதியாக உயர்த்த மேற்கொண்டு வரும் முயற்சியில் இந்த ஒப்பந்தம் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. எனவே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்களை வகுத்து செயல்படுத்தும் ஒன்றிய அரசுக்கு பாராட்டினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
