சென்னை: ஒரே அமர்வில் இதய மேலறையின் ஒட்டுறுப்பு மூடப்பட்டு, மைட்ராக்ளிப் பொருத்தி காவேரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. பக்கவாத நிகழ்வு, இதய மேலறையில் குறுநடுக்கம் மற்றும் மிட்ரல் வால்வில் கடுமையான கசிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அதிக அபாயத்தில் இருந்த 79 வயது மருத்துவ பயனாளர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மிட்ரல் வால்வு கசிவு என்பது, வால்வு சரியாக மூடப்படாமல், இதயத்திற்குள் ரத்தம் பின்னோக்கி கசியும் ஒரு நிலையாகும்.
திறந்த நிலை இதய அறுவைசிகிச்சை இப்பாதிப்புக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறையாக இருந்தாலும், பல வயதான நோயாளிகள் அல்லது பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு அதிக ஆபத்தான சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. இத்தகைய நோயாளிகளுக்கு, மைட்ராக்ளிப் போன்ற மிகச்சிறிய துளை மூலம் செய்யப்படும் சிகிச்சைகள் ஒரு சிறந்த மாற்றாக அமைகின்றன. மைட்ராக்ளிப் என்பது, திறந்த நிலை அறுவை சிகிச்சைக்கு பதிலாக ஒரு சிறிய கிளிப்பை கத்தீட்டர் மூலம் மிட்ரல் வால்வில் பொருத்தி, வால்வு சரியாக மூடவும் கசிவைக் குறைக்கவும் உதவும் ஒரு எளிய செயல்முறையாகும்.
இந்த நோயாளிகளில் பலருக்கு ஏட்ரியல் பைப்ரிலேஷன் எனப்படும் சீரற்ற இதயத் துடிப்பு இருக்கும். இது இதயத்தின் சிறிய பை போன்ற இடமான இடது இதய மேலறை ஒட்டுறுப்பில் ரத்தக் கட்டிகளை உருவாக்கி, பக்கவாத அபாயத்தை அதிகரிக்கிறது. இடது இதய மேலறை ஒட்டுறுப்பை மூடல் (LAAC) என்பது, ஒரு சிறப்பு கருவியைப் பயன்படுத்தி இந்த பை போன்ற பகுதியை மூடும் ஒரு செயல்முறையாகும். இதன் மூலம் ரத்தக் கட்டிகள் உருவாவது தடுக்கப்படுவதால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைகிறது; மேலும் நீண்ட காலத்திற்கு ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டிய அவசியமும் தவிர்க்கப்படுகிறது.
இந்நோயாளிக்கு இருந்த இரு சிக்கலான பாதிப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காண, காவேரி மருத்துவமனையின் இதய சிகிச்சை குழுவினர் மைட்ராக்ளிப் பயன்படுத்தி கசியும் வால்வை சரிசெய்வதுடன், சிறப்பு கருவி மூலம் இடதுபுற இதய மேலறை ஒட்டுறுப்பை மூடும் ஒருங்கிணைந்த சிகிச்சையை மேற்கொண்டனர். இந்த இரண்டு இடையீட்டு செயல்முறைகளும் ஒற்றை மயக்க மருந்தளிப்பின் கீழ், ஒரே அணுகல் வழித்தடத்தின் மூலம் செய்யப்பட்டன.
இந்த சிகிச்சைக்குப் பிறகு, 24 மணிநேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டார்; உடல்நிலை சீரானவுடன் 48 மணிநேரத்திற்குள் நலமுடன் வீடு திரும்பினார்.
