×

சென்னை அரசு மருத்துவமனைகளில் ஹீட் ஸ்ட்ரோக்குக்கு சிறப்பு வார்டுகள் தயார்

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்ப அலையை எதிர்கொள்ளும் வகையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வெப்ப பக்கவாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) பாதிப்புக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னையில் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்துள்ளதால், தமிழ்நாடு சுகாதாரத் துறை இயக்குநரகம் வெப்ப அலை காலத்தில் (மார்ச் முதல் ஜூலை வரை) அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெப்ப பக்கவாதம் அல்லது வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டுள்ளது.

வெப்ப பக்கவாதம் என்பது உடல் வெப்பநிலை கட்டுப்பாட்டை இழந்து, மயக்கம், தலைசுற்றல், நீர்ச்சத்து குறைபாடு போன்ற அறிகுறிகளுடன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை. கட்டுமான தொழிலாளர்கள், விவசாயிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர். எனவே முன்னெச்சரிக்கை காரணமாக இந்த சிறப்பு வார்டுகள் முழு செயல்பாட்டில் உள்ளன. சென்னையில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் குளிரூட்டப்பட்ட வார்டுகள், கண்காணிப்பு உபகரணங்கள், IV திரவங்கள் மற்றும் அவசர சிகிச்சைக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 15 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளன.

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வெப்ப பக்கவாதம் அல்லது வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு காரணமாக வருபவர்களை முதலுதவி அளித்த பிறகு வெப்ப பக்கவாதம் என்று தெரியவந்தால் அவர் ஐசியூவிற்கு மாற்றப்படுவார். வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு என்றால் அதற்கு ஏற்ப வார்டுக்கு மாற்றப்படுவார். எனவே தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மருத்துவமனைகளில் இதுவரை வெப்ப பக்கவாதம் அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள் வெயில் நேரத்தில் (காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை) வெளியில் செல்லாமல் இருக்கவும், போதுமான தண்ணீர் அருந்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அல்லது 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ள வேண்டும்.

Tags : Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Health Department Directorate ,
× RELATED ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் வழக்கறிஞரானார்