×

ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் போக்குவரத்தை சீரமைக்க 400 போலீசார் நியமனம்

ஊட்டி : ஊட்டியில் கோடை சீசனை முன்னிட்டு போக்குவரத்தை சீரமைக்க சிறப்பு காவல் படை உட்பட 400 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

விடுமுறை நாட்கள் மற்றும் வார விடுமுறையின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை சீசன் ஆரம்பித்துள்ளதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோடை சீசனை முன்னிட்டு ஆண்டு தோறும் போக்குவரத்தை சீரமைக்க வெளியூர் போலீசார் வரவழைக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இம்முறை சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருவதால் கோடை சீசன் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளுக்காக வெளி மாவட்ட போலீசாரை அழைக்க முடியாத நிலை உருவாகியது. இதனால், உள்ளூர் போலீசார், ஊர்க்காவல் படை, மற்றும் டிராபிக் வார்டன்ஸ் ஆகியோரை கொண்டு போக்குவரத்து சீரமைப்பு பணிகளை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்தனர்.

தற்போது, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தினமும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணிக்கு செல்வதால் போக்குவரத்து சீரமைப்பு, சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், சீசன் முடியும் வரை நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு ஆகிய பணிகளுக்காக வழக்கத்தை விட கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் இருந்து 100 சிறப்பு காவல் படை மற்றம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள போலீசார், டிராபிக் வார்டன்ஸ், ஊர்க்காவல் படை என தற்போது 400 போலீசார் நியசிமக்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் கூடுதல் போலீசார் மற்றும் வெளியூரில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் தற்போது சீசன் துவங்கி உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வார விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், வாகன நெரிசல் ஏற்படுகிறது. பொதுவாக சீசன் சமயங்களில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்க ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் கூடுதல் போலீசார் நியமிக்கப்படும்.

ஆனால், இம்முறை சட்டமன்ற தேர்தல் நடந்த காரணத்தால் அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், சீசன் பாதுகாப்பு பணிக்கு வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதல் ேபாலீசார் வரவழைக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், கோவை சிறப்பு காவல் படையினர் 100 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 300 போலீசார், ஊர்க்காவல் படை மற்றும் டிராபிக் வார்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டு போக்குவரத்து சீரமைப்பு பணிகள் மற்றும் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வெளியூரில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு போக்குவரத்து சீரமைப்பு பணிகள் மற்றும் சுற்றுலா தலங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Ooty ,
× RELATED ஆற்காடு கிராமத்தில், பல்லி வால் கிடந்த...