‘இந்தியா பன்முக கலாச்சார தேசம் அல்ல’ ஆளுநர் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் சென்னையில் ஸ்ரீஅகர்வால் சபாவின் 75ம் ஆண்டு பவள விழா நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், ‘நமது நாடு பன்முக கலாச்சார தேசம் அல்லது பல்வேறு கலாச்சார சமூகங்களைக் கொண்ட தேசம் என குறிப்பிடுகிறோம். இது மிகவும் தவறானது. நாம் வெவ்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் அல்ல. வட இந்தியா முதல் தென்னிந்தியா வரை அனைவருக்கும் ஒரே கலாச்சாரம்தான்’ என்றார்.

ஆளுநரின் இந்த உரை இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரானதாகும். இந்தியா ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழியை கொண்டது எனவும், அது இந்து தேசம், இந்து கலாச்சாரம், இந்தி மொழி எனவும் ஆர்எஸ்எஸ் பன்முகத்தன்மைக்கு எதிராக கூறிவருகிறது. ஆர்.எஸ்.எஸ்.சின் இக்கருத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் கூறியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இந்தியா பல்வேறு இனங்கள், தேசிய இனங்கள், மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள் கொண்ட நாடாகும். இந்திய மக்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உன்னத கோட்பாட்டை பின்பற்றி, ஒருவர் பண்பாட்டை மற்றொருவர் மதித்து நல்லிணக்கத்தோடு வாழ்கின்றனர்.

அரசியல் சட்டத்தை காக்க வேண்டிய ஆளுநரே அதற்கு எதிராக செயல்படுவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். இத்தகைய போக்கை ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உடனடியாக கைவிட வேண்டும். இல்லை எனில் அவரை கண்டித்து போராட்டங்களை முன்னெடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: