தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்ப இன்று (ஏப்.25) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.2 நாட்களுக்கு மொத்தமாக 14,508 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.

மேலும் வெளியான அறிக்கையில்; 2026- சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும் வாக்குபதிவு முடித்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தேர்தல் முடிந்த பின்னர் 25/04/2026 மற்றும் 26/04/2026 ஆகிய நாட்களில் பொதுமக்கள் சிரமமின்றி சென்னைக்கும் மற்ற ஊர்களுக்கும் பயணம் செய்திட ஏதுவாக 25/04/2026 அன்று தினசரி இயக்ககூடிய 2092 பேருந்துகளுடன் கூடுதலாக 1295 பேருந்துகளும் முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 2500 சிறப்பு பேருந்துகளும், 26/04/2026 அன்று சென்னைக்கு தினசரி இயக்க கூடிய 2092 பேருந்துகளுடன் 3184 சிறப்பு பேருந்துகளும் பிற ஊர்களுக்கு 3345 சிறப்பு பேருந்துகளும் ஆக ஒட்டு மொத்தமாக 14508 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 25/04/2026 சனிக்கிழமை 19676 பயணிகளும் 26/04/2026 ஞாயிறு அன்று 47001 பயணிகளும் முன்பதிவு செய்து பயணிக்க உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே. பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories: