வாக்கு சதவீத அதிகரிப்புக்கு தவெக வருகைதான் காரணம் அடிப்படை அறிவின்றி அப்பட்டமாக பொய்யை கட்டமைக்கும் விஜய்: சமூகவலைதளங்களில் கடும் விமர்சனம்

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியது முதலே இயல்பாக நடக்கும் எல்லாவற்றையும் தவெக பெயரில் எழுதிக்கொள்வதில் குறியாக உள்ளனர் தவெக ஆதரவாளர்கள். இந்த தேர்தலில் எது நடந்தாலும் அதற்கு விஜய் பேக்டர்தான் காரணம் என சமூகவலைதளங்களில் கட்டமைத்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது. நேற்று, தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டாார். அதில், ‘‘இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன.

ஆனால், 2026ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது. 85சதவீதம்வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று. வாக்குச்சாவடிகள் எங்கும் கோயில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாக குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அதுமட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா? தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான்.

இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே’’ எனக் கூறியுள்ளார்.விஜய்யின் இந்த அறிக்கை தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. வாக்கு சதவீத அதிகரிப்பிற்கு காரணம் எஸ்.ஐ.ஆர். மூலம் ஏராளமான வாக்குகள் நீக்கப்பட்டதுதான் என்று ஆதரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் சென்னையில் உள்ள 9 தொகுதிகளில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்தாலும், வாக்குப் பதிவை எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது குறைந்துள்ளதையே தரவுகள் தெளிவாக காட்சிப்படுத்துகிறது. தமிழகம் முழுவதும் வாக்குப் பதிவு சதவீதம் பெரிய அளவில் அதிகரித்து இருந்தாலும், எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் விஜய் சொல்வதுபோல் வரலாறு காணாத ஒன்றும் இல்லை. மக்கள்தொகை அதிகரிப்பால் ஒவ்வொரு முறையும் வாக்குப் பதிவு அதிகரிப்பதைப் போன்ற இயல்பான அதிகரிப்புதான்.

ஆனால், இதையெல்லாம் மறைத்து விஜய் வழக்கம்போல தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ள தாங்கள் வந்த பிறகுதான் தமிழகத்தில் உள்ளவர்கள் வாக்களிக்க வருவதுபோல் பொய்யான ஒன்றை கட்டமைத்து வருகிறார் என விமர்சித்து வருகிறார்கள். விஜய் என்ன பொய் சொன்னாலும் நம்பும் தவெகவினரிடம், தனது வருகையால்தான் வாக்கு சதவீத அதிகரிப்பு என்ற பொய்யான ஒன்றைச் சொல்லி நம்பவைக்கிறார். செய்திகளில் வெளியான தகவல்களை பார்த்தாலே, அடிப்படை அறிவுகூட இல்லாமல் விஜய் சொல்லும் அப்பட்டமான பொய் என்பது வெளிப்பட்டுவிடும் என்றும் விமர்சித்து வருகிறார்கள்.

Related Stories: