திருவனந்தபுரம்: கேரளத்தில் வழக்கத்தை விட இந்த வருடம் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த இரு மாதங்களாக வெப்பநிலை சராசரியை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று முதல் கேரளத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை மேலும் அதிகரித்துள்ளது. நேற்றும், இன்றும் கொல்லம், பாலக்காடு, திருச்சூர் ஆகிய 3 மாவட்டங்களில் சராசரியை விட வெப்பநிலை 5 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியசை தாண்டி கொளுத்தி வருகிறது. இந்த மாவட்டத்தில் அடுத்த சில நாட்களுக்கு இதே நிலை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்லம், திருச்சூரில் 40 டிகிரி செல்ஷியசும், கோட்டயம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் 38 டிகிரி செல்ஷியசும், ஆலப்புழா, மலப்புரம், கண்ணூர் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் 37 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், திருவனந்தபுரத்தில் 36 டிகிரி செல்ஷியஸ் வரையும் வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கண்ணூர் அருகே உள்ள பள்ளிப்பொயில் என்ற இடத்தில் சுனில்குமார் (37) என்ற கிணறு வெட்டும் தொழிலாளி பணியில் இருந்தபோது திடீரென மயக்கமடைந்து விழுந்தார். அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். கடும் வெயிலில் பணிபுரிந்தது தான் இவரது மரணத்திற்கு காரணம் என்று டாக்டர்கள் கூறினர். வெப்பநிலை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயில் நேரடியாக உடலில் படும் வகையில் நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
