ஊட்டி, ஏப். 23: சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நீலகிரி பூச்சிப்பிடிப்பான் (நீலகிரி பிளை கேட்ச்சர்) சின்னம் வெளியிடப்பட்டது. மூன்று தொகுதிகளிலும் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், ரங்கோலி போட்டிகள், குறும்படங்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டது.
அந்த வகையில், தயாரிக்கப்பட்ட 11 விழிப்புணர்வு குறும்படங்களில், குன்னூர் அரசு கல்லூரி மாணவர்கள் தயாரித்த இலக்கிய தேர்தல் விழிப்புணர்வு குறும்படம் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது. இதைத்தொடர்ந்து இந்த குறும்படம் தயாரித்த 4 மாணவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார். அப்போது கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் அபிலாஷா கவுர், ஆவின் பொது மேலாளர் ராஜேஷ் உட்பட பலர் இருந்தனர்.
