வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் காலவரையின்றி போர் நிறுத்தம் அறிவித்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான், ஜலசந்தியை கடக்க முயன்ற 2 கப்பல்களை சிறைபிடித்தது. இது இரு தரப்பு பேச்சுவார்த்தையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 8ம் தேதி 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இப்போர் நிறுத்தம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதிக்கவில்லை. ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா தொடரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என ஈரான் மறுத்தது. இந்த சூழலில் போர் நிறுத்தம் முடிய சில மணி நேரங்கள் இருந்த நிலையில், போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக் கொண்டார்.
இது குறித்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் வேண்டுகோளின் பேரிலும், ஈரான் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒருங்கிணைந்த முன்மொழிவை முன்வைக்கும் வரை அந்நாட்டின் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். ஆனாலும் ஈரானின் துறைமுகங்கள் மீதான முற்றுகை தொடரும்’’ என்றார்.
இந்த போர் நிறுத்தத்திற்கு எந்த ஒப்புதலையும் அளிக்காத ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாய் அராக்சி, ‘‘ஈரான் துறைமுகங்களை தடுப்பது போர் நடவடிக்கை. இது போர் நிறுத்தத்தை மீறுவதாகும். ஒரு வர்த்தக கப்பலை தாக்கி, அதன் பணியாளர்களை பணயக்கைதிகளாக பிடிப்பது இன்னும் பெரிய மீறல். அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கை தொடரும் வரையிலும் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது. அமெரிக்காவின் கட்டுப்பாடுகளை எப்படி முறியடிப்பது, ஈரானின் நலன்களை எப்படி பாதுகாப்பது என்பது எங்களுக்கு தெரியும்’’ என்றார்.
முன்னதாக நேற்று முன்தினம் இலங்கை-இந்தோனேசியா இடையே இந்திய பெருங்கடலில் கச்சா எண்ணெயை கடத்தும் ஈரான் கப்பலை அமெரிக்க படை சிறை பிடித்தது. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற 3 கப்பல்கள் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கி சூடு நடத்தி தாக்குதல் நடத்தியது. அதில் எம்எஸ்சி பிரான்செஸ்கா மற்றும் எபமினோடெஸ் எனும் 2 கப்பல்களை அவர்கள் சிறைபிடித்து ஈரான் கடல் பகுதிக்கு கொண்டு சென்றதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
தங்களின் எச்சரிக்கையை மீறி ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்றதால் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் கப்பலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய், எரிவாயு விநியோகத்தை கடுமையாக முடக்கி உள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையேயான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலாகி உள்ளது.
* போர் நிறுத்தத்தால் ஒரு பயனுமில்லை
காலவரையற்ற போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்தாலும், ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை தொடரும் என கூறி உள்ளார். இதற்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியில் தனது உரிமையை நிலைநாட்ட எதிரிகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி மறுக்கிறது. இதனால் உலகின் 20 சதவீத எண்ணெய், எரிவாயு கொண்டு செல்லப்படும் ஹார்முஸ் ஜலசந்தி முற்றிலும் முடங்கியிருப்பதால், மேற்கு ஆசியாவில் மீண்டும் பெரிய அளவில் போர் தொடங்கப்படாவிட்டாலும், இது உலக பொருளாதாரத்தில் தொடர்ந்து பெரும் சுமையாக நீடிக்கிறது. ஏற்கனவே நடந்த மோதல் காரணமாக எண்ணெய், எரிவாயு விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, அத்தியவாசிய பொருட்கள் விலை அதிகரித்த நிலையில், இனி எவ்வளவு காலம் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்குமோ அந்த அளவுக்கு அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். உலக பொருளாதாரம் மீண்டு வர இன்னும் அதிக காலம் எடுக்கும்.
* பாகிஸ்தான் பிரதமர் நன்றி
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டித்ததற்காக அதிபர் டிரம்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார். இனி போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பினரும் விரிவான அமைதி ஒப்பந்தத்தை எட்டுவார்கள் என்றும் ஷெரீப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
