சேலத்தில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் அன்புமணியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘1998ல் அதிமுக பாஜவோடு கூட்டணியில் இருந்தோம். மகளிர் இடஒதுக்கீட்டுக்காக ஜெயலலிதா வைத்த கோரிக்கையை ஏற்று வாஜ்பாய் அனுமதி கொடுத்தார். அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை சட்டத்துறை அமைச்சராக இருந்து மகளிர் மசோதாவை தாக்கல் செய்தார்.
அப்போது முலாயம் சிங் யாதவ் கட்சியின் எம்பி மசோதாவைப் பிடுங்கி கிழித்து எறிந்தார். இப்போது அதே மசோதாவை பிரதமர் மோடி கொண்டுவந்தார். ஏற்கனவே ஜெயலலிதா கொண்டுவர நினைத்ததை பிரதமர் மோடி கொண்டுவந்தார். எதிர்க்கட்சிகள் அதை தடுத்து விட்டனர். இந்த மசோதா நிறைவேறியிருந்தால் சட்டப்பூர்வமாக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33சதவீத இடஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால் அதை தடுத்துவிட்டனர்,’’ என்றார்.
