அண்ணாமலை என்ன தியாகியா ஆயிரக்கணக்கான கோடி சொத்து சேர்த்தது எப்படி: செந்தில்பாலாஜி கேள்வி

திமுக மேற்கு மண்டல பொறுப்பாளரும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான செந்தில் பாலாஜி நேற்று தேர்தல் பணிமனையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செந்தில்பாலாஜி முகத்திரையை மே 4ம் தேதி கோவை மக்கள் கிழிப்பார்கள் என அண்ணாமலை கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு செந்தில்பாலாஜி கூறுகையில், ‘‘அவரிடம் ஒரு வாட்சுக்கு பில் கேட்டோம். அவர் கடைசி வரை கொடுக்காமல் மளிகை கடையில் தருவது போல துண்டு சீட்டை காட்டினார். எனக்கு 4 ஆட்டுக்குட்டிகள் போதும் என்றவர், நண்பர்தான் சாப்பாடு போடுகிறார்கள், வீட்டு வாடகை கொடுக்கிறார்கள் என சொன்னவர், எப்படி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தார். கோவையில் எத்தனை ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார். அதன் மதிப்பு என்ன? எங்கிருந்து அந்த பணம் வந்தது. தோட்டத்தில் ஆயிரம் ஆடு மேய்ச்சல் செய்து அதனை சந்தையில் விற்ற பணத்தில் நிலம் வாங்கினாரா? என்னை குறை சொல்ல கூடிய அவர் தியாகியாக இருக்க வேண்டும். அந்த வார்த்தைக்கும், அவருக்கும் துளி கூட பொருத்தமில்லாத நபர் அவர்’’ என்றார்.

* தமிழக உரிமைகளை பற்றி கவலை இல்லை: எடப்பாடி மீது பெ.சண்முகம் தாக்கு
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தரராஜை ஆதரித்து மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கடல் மீனவர்களுக்கு சொந்தம். அந்த கடலை பாஜ அரசு அதானிக்கு விற்றுக்கொண்டிருக்கிறது. 2000 ஏக்கர் கடலை அவர்கள் அதானிக்கு ஒப்படைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாஜவோடுதான் அதிமுக கூட்டு சேர்ந்திருக்கிறது. ​எனவே, மீனவர்கள் அதிமுக – பாஜ கூட்டணியை புறக்கணிக்க வேண்டும். ஒன்றிய அரசின் இத்தகைய தவறான கொள்கைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறோம்.

நீங்கள் விரும்பக்கூடிய கடவுளை நீங்கள் வழிபடுவதற்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் வழிபடுவதற்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தித் தரும். ஆனால் பாஜ ஆளும் வட இந்திய மாநிலங்களில் அத்தகைய நிலைமை கிடையாது. ஒரு கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் சென்று அமைதியாக பிரார்த்தனை செய்ய முடியாது. எந்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் உள்ளே புகுந்து கலவரத்தை, வன்முறையை ஏற்படுத்துவார்கள் என்று தெரியாது. அதேபோல், இஸ்லாமியர்களுக்கு எதிராக மதத்தைப் பயன்படுத்தி மோசமான அரசியலை முன்னெடுக்கும் கூட்டம் பாஜ. தமிழ்நாட்டை பற்றி, மக்கள் உரிமைகளைப் பற்றி, மதச்சார்பின்மையை பற்றி, தமிழகத்தின் முன்னேற்றத்தை பற்றி கவலைப்படாமல் எப்படியாவது பதவியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு எடப்பாடி பழனிசாமி பாஜவோடு கூட்டணி சேர்ந்துள்ளார் என்பதை மறந்து விடாதீர்கள். எனவே, அதிமுக பாஜ அணி முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: