ஸ்ரீகாளஹஸ்தி : திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மாநில கல்வித்துறை சார்பில் ‘படி பிலுஸ்துந்தி’ அதாவது பள்ளி அழைக்கிறது என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள எஸ்.எஸ்.பி நகராட்சி பள்ளியில், முதல்வர் பிருந்தா தேவி தலைமையில் மாணவர்களுடன் ஊர்வலம் நேற்று நடந்தது.
அப்போது அவர் பேசுகையில், `அனைத்து ஆசிரியர்களும் தங்கள் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளிக்கு செல்லும் வயதில் உள்ள குழந்தைகளின் பெற்றோரை சந்தித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்கவும் இதுபோன்ற ஊர்வலம் பயனுள்ளதாக இருக்கும். பள்ளி கல்வித்துறை இதற்கான திட்டத்தை தயாரித்துள்ளது. முதலாம் வகுப்பு சேர்க்கையில் முக்கிய கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆறாம் வகுப்பு அரசு, உயர்நிலைப்பள்ளிகளில் சேர முடியும் என்பதற்காக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு இதுபோன்ற நிகழ்ச்சி நடக்கிறது. இவ்வாறு கூறினார்.
