கோடை வெயிலுக்கு நடுவே திடீர் மூடுபனி பொதுமக்கள் மகிழ்ச்சி

 

ராயக்கோட்டை, ஏப்.20: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காலை 9 மணிக்கே வெயில் சுட்டெரிப்பதும், காலை 10 மணிக்கு மேல் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், கண் வீக்கம் மற்றும் கண் எரிச்சலுடன் இரவில் தூக்கமின்றி தவிப்பிற்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சாலைகளில் மாலை 5 மணிக்கு மேல் தான் மக்கள் நடமாட்டத்தைக் காண முடிகிறது. பஸ் ஸ்டாண்டில் கூட பயணிகள் இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ராயக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென மூடுபனி நிலவியது. இதனால், முகப்பு விளக்கை எரியவிட்ட படி வாகனங்களை ஓட்டிச்சென்றனர். மூடுபனியுடன் லேசான குளிர்ந்த காற்றும் வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: