×

ஓடுபாதை சேதம் அடைந்ததால் சென்னை-புனே இடையே விமான சேவை ரத்து

சென்னை: சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.05 மணிக்கு 162 பயணிகளுடன் புனே புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புனேவில் தரை இறங்க முடியாமல் மும்பை விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதேபோல் இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து 148 பயணிகளுடன் புனே புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் புனே விமான நிலைய ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ள தகவல் கிடைத்ததால் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது.

மேலும் சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 1.10 மணி, 3.10 மணி, 4.50 மணிக்கு புனே செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் நேற்று அதிகாலை 5.20 மணிக்கு புனே செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானமும் ரத்து செய்யப்பட்டது. இதேபோல் புனேவில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

சென்னை – புனே – சென்னை இடையே இயக்கப்படும் 11 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து பயணிகளுக்கு முறையான அறிவிப்புகளை அதிகாரிகள் அறிவிக்காதால் பயணிகள் கடும் அவதி அடைந்து, விமான நிறுவன கவுன்டர்களை சூழ்ந்து கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

Tags : Chennai ,Pune ,Air India Express ,Mumbai airport ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் மு.க.ஸ்டாலின் அலை...