சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தினைத் தொடங்கி முதல்முறையாகத் தேர்தலைச் சந்திக்கிறார். விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தவெக தலைவர் விஜய் தேர்தல் அறிவிப்பு வந்ததும் தீவிர பரப்புரையில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும்பாலும் அனுமதி வாங்கப்பட்டாலும் அதை ரத்து செய்துவிட்டு ஓய்வு எடுத்துவருகிறார். அவ்வப்போது சில இடங்களுக்குப் பரப்புரைக்கும் சென்று வருகிறார்.
நேற்று முன்தினம் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் உள்ள பணிமனைக்குச் சென்று கோலம் போட்டுவிட்டு வந்தார். இந்நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக விவாதிக்க பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட பாகமுகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தைப் பனையூரில் தவெக அலுவலகத்தில் நடத்தியுள்ளார். இது தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் உள்ள பாகமுகவர்கள் கூட்டத்தை அந்தத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடத்துவதுதான் வழக்கம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் இந்த நடைமுறையையே பின்பற்றுவார்கள். ஆனால், அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு தொகுதியின் பாகமுகவர்களை கூட்டதை வேறு இடத்தில் நடத்தியுள்ளார் என விமர்சிக்கப்படுகிறது. ஏற்கனவே, விஜய் தான் வெற்றி பெற்றால் மாதம் ஒருமுறை தொகுதிக்கு வருவேன் என்று சொன்னார். ஆனால், தற்போது தேர்தல் பணிகளுக்காகக்கூடத் தொகுதிக்குச் செல்லாதவர் வெற்றி பெற்ற பிறகு தொகுதிக்கு வருவாரா என்ற கேள்வியைச் சமூக வலைதளங்களில் எழுப்பிவருகிறார்கள்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் இருக்கும் இடத்திற்கு அழைத்து நிவாரண உதவிகளை வழங்குகினார், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை மாமல்லபுரத்திற்கு அழைத்து ஆறுதல் கூறினார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தனது அலுவலகத்திற்கு அழைத்து ஆதரவு தெரிவித்தார் விஜய். அதன் தொடர்ச்சியாகத் தற்போது தான் போட்டியிடும் தொகுதியில் உள்ள பாகமுகவர்களைப் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அழைத்து தேர்தல் பணிகள் குறித்து விவாத்தித்துள்ளதை நெட்டிசன்கள் விமர்சித்துவருகிறார்கள்.
