சென்னை: வரலாறு தந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி பாஜக-வை எடப்பாடி பழனிசாமி ஒருமுறையாவது எதிர்த்து பேச வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி கடைசி வரை அடிமையாக, கோழையாக இருக்க வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.
ஒரு தமிழனாக இருந்து கொண்டு டெல்லிக்கு முது வளைந்து கொடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையிலேயே வெட்கமாக இல்லையா என்று கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். மகளிர் இட ஒதுக்கீட்டை தாம் வரவேற்பதாகவும், ஆனால் தொகுதி மறுவரையறைதான் பிரச்சனை என்றும் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தொகுதி மறுவரையறை என்ற பேராபத்து தமிழ்நாட்டை சூழ்ந்துள்ளது. இந்த சூழலில் வரலாறு கொடுத்திருக்கும் இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி பாஜக-வை ஒரு முறையாவது எடப்பாடி எதிர்த்து பேச வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் பிறந்து விட்டு டெல்லிக்கு இப்படி அச்சம் கொள்ளலாமா.! தமிழகம் உட்பட தென்மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி குரல் கொடுக்கவில்லை என்றால் அதற்கான சரியான பாடத்தை நடைபெற உள்ள தேர்தலில் தமிழக மக்கள் அவருக்கு புகட்டுவார்கள் என்று கூறி இருக்கிறார் ஸ்டாலின்.
இதனிடையே தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் கருப்புக் கொடி ஏற்றினார். தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினர். மாநிலங்களின் உரிமைகளை பறிக்காதே என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் முழக்கமிட்டனர். மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்வதால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இன்று முதல் 3 நாள் நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கலாகிறது. சென்னை தேனாம்பேட்டையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் இல்லம், கோபாலபுரத்திலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
