மதுரை தெற்கு தொகுதியில் வென்று பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து செயல்படுத்துவேன்: மதிமுக வேட்பாளர் மு.பூமிநாதன் உறுதி

மதுரை, ஏப். 16: மதுரை தெற்கு தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில், மதிமுக சார்பில் மு.பூமிநாதன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் நேற்று தெற்கு தொகுதியின் பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதன்படி மதுரை முனிச்சாலை பகுதி 43வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அவர் பேசுகையில், ‘‘கடந்த ஐந்து ஆண்டுகளில் தெற்கு தொகுதியில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி. இரண்டாவது முறையாக நிச்சயம் அமையும். அப்போது இத்தொகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, கண்டிப்பாக அனைத்து தேவைகளையும் செய்து முடிக்க பாடுபடுவேன். எனவே அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும்’’ என்றார். பிரசாரத்தின் போது மதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

 

Related Stories: