நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என கூறியது உண்மை நிர்மலா சீதாராமன் குட்டு அம்பலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

சென்னை: ‘நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை நிறுத்தவும்’ என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. நீங்கள் எழுதிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார். இதை தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் அ்க் கடிதத்தை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு கருத்தும் கூறியிருந்தார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது. நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை பல மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தாங்கள் தெரிவித்திருப்பதும் உண்மைக்கு புறம்பானது’’ என பதிலடி கொடுத்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ஒன்றிய பாஜ அரசு, தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத் தொகையால், நெல் உற்பத்தி நிறைய பெருகி வருகிறதாம்.. அப்படி பெருகும் காரணத்தால் பல்வேறு பிரச்னைகள் உருவாகிறதாம். அதனால், தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஊக்கத் தொகையை மறுபரிசீலனை ெசய்ய வேண்டுமாம். என்ன கொடுமை பாருங்கள். மொத்தத்தில் நெல்லுக்கு ஊக்க தொகை வழங்கக் கூடாது என அறிவுறுத்தி ஒன்றிய அரசு நமக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள் என்றார். தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு திட்டமிட்டு இதுபோன்ற செயல்களை செய்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த கண்டனத்தை தொடர்ந்து, நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த உத்தரவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும் புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே, நெல்லுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்கு தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது. கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.

எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யவும் என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறீர்கள். தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்கு ஒன்றிய செலவினத் துறைச் செயலாளர் எழுதிய கடிதத்தை ஒன்றிய அமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். அந்த கடிதத்தில், ‘‘கடந்த சில ஆண்டுகளாக கோதுமை, நெல்விளைச்சல் அமோகமாக உள்ளது. அதனால் இவற்றின் இருப்பும் உபரியாக உள்ளது. இதன் காரணமாக அரசின் கருவூலத்திற்கு அதிக சுமை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு உள்பட சில மாநில அரசுகள் கோதுமை, நெல் சாகுபடிக்கு கூடுதல் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளன. இதன் மூலம் மேலும் உற்பத்தி அதிகரிக்கும்.

கோதுமை, நெல் பயிர்களுக்கு அதிக நீர் ஆதாரம் தேவை. இதனால் நிலத்தடி நீர் இருப்பு பாதிக்கும். மண் வளம் பாதிக்கும். அதே நேரத்தில் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகள் ஆகியவற்றின் விளைச்சல் குறைவாக உள்ளன. ஆகவே இந்தப் பொருள்களை நாம் அதிக அளவில் இறக்குமதி செய்கிறோம். இதை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் தற்போதுள்ள ஊக்கத் தொகை திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன். நெல், கோதுமைக்கு
வழங்கப்படும் ஊக்கத் தொகையை நிறுத்துவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.

அதே நேரத்தில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள் ஆகியவற்றின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விட்ட உடனேயே அக் கடிதத்தை வெளியிட்டதும், முதல்வர் சொன்னது தவறு என்பதை நிரூபிக்கிறாரோ என எல்லோரும் நினைத்தனர். ஆனால் கடிதம் தெளிவாக, நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்துங்கள் என்றுதான் கூறுகிறது. இதனால் நிர்மலா சீதாராமனின் குட்டு அம்பலப்பட்டு விட்டது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே, தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள். அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது. மேலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக தாங்கள் தெரிவித்திருப்பதும் உண்மைக்கு புறம்பானது. கடந்த பிப்ரவரி மாதம், கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் வெளியிட்ட பதிவே இதற்கு சாட்சி. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

* நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியது.
* இதை தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்பலப்படுத்தினார்.
* முதல்வரின் புகார் உள்நோக்கம் கொண்டது என்றார் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
* கடிதத்தில் எல்லாம் உள்ளது; வெளியிட தயாரா என சவால் விட்டார் முதல்வர்
* நிர்மலா சீதாராமனும் உடனடியாக அக் கடிதத்தை வெளியிட்டார்.
* ஆனால் ஊக்கத்தொகையை நிறுத்த சொல்லும் வாசகம் கடிதத்தில் அப்படியே இருந்தது. இதனால் அவரது குட்டு அம்பலமானது.

Related Stories: