‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் லீக்கான விவகாரம் மொத்த உரிமையும் தயாரிப்பாளரிடமே இருக்கிறது: தணிக்கை வாரியம் விளக்கம்

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி உள்பட பலர் நடித்துள்ள படம், ‘ஜன நாயகன்’. இப்படத்தின் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் கசிந்தது. பிறகு சில மணி நேரங்களில் முழு படமும் இணையத்தில் கசிந்ததால் ரசிகர்களும், படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர். அரசியல் நோக்கத்துக்காக விஜய் தரப்பில் இருந்தே இப்படத்தை கசியவிட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

மேலும், மத்திய தணிக்கை வாரியத்தில் இருக்கும் யாரோ ஒருவரால் வெளியிடப்பட்டு இருக்கும் என்றும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில், ‘ஜன நாயகன்’ திரைப்பட கசிவு குறித்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (சிபிஎப்சி) அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘ஜன நாயகன்’ படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தில் இருந்து கசிந்ததாக கூறப்படும் செய்திகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை.

சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரையரங்கு படங்களுக்கும் பாதுகாப்பான கேடிஎம் (Key Delivery Message) என்ற முறை பின்பற்றப்படுகிறது. உள்ளடக்கத்துக்கான அணுகல் கடவுச்சொல் மூலம் அவை பாதுகாக்கப்படுகிறது. அந்த கடவுச்சொல்லானது அப்படத்தின் தயாரிப்பாளரிடமே முழுமையாக இருக்கும்.

உரிய கடவுச்சொல் இல்லாமல் படத்தை அணுகவோ, பார்க்கவோ முடியாது. ‘ஜன நாயகன்’ படத்தின் டிஜிட்டல் சினிமா தொகுப்பு (DCP), மார்ச் 17ம் தேதி அன்று மும்பையில் உரிய ஒப்புதலுடன் விண்ணப்பதாரரிடம் ஒப்படைக்கப்பட்டது. அது அன்று முதல் அவர்களிடமே இருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: