சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் நிலையில் 233 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தவெக தலைவரும் அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும் தொடர்ச்சியாக திமுக மீதான விமர்சனத்தை வைப்பதை மட்டுமே அரசியலாக முன்னெடுத்து வருகிறார்கள்.
கட்சி தொடங்கியது முதலே திமுக அரசு தங்களை ஒடுக்க முயற்சிப்பதாகவும், விஜய்யின் கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற ஆதாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்புவதை மட்டுமே முதன்மையான அரசியல் செயல்பாடாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில், தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் எல்லா அதிகாரங்களும் தேர்தல் ஆணையத்திடம்தான் இருக்கும், திமுக அரசிடம் எந்த அதிகாரமும் இருக்காது;
அப்போது எங்கள் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் வீதி வீதியாகச் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்வார் எனச் சொன்னார் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா. அவரின் கருத்தையே மற்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் பிரதிபலித்தனர். ஆனால், தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்து பத்து நாட்கள் கழித்தே விஜய் பரப்புரைக்கு வெளியே வந்தார். வேட்பாளர் தேர்வினால் தான் பத்து நாள் தாமதமாக பரப்புரை தொடங்கப்பட்டது என அதற்கு காரணமாகச் சொல்லப்பட்டது.
வேட்பாளர் அறிமுகம் செய்யப்பட்டதும் தலைவர் தமிழகம் முழுவதும் பரப்புரை செய்வார் எனக் காத்துக்கிடந்த தவெக தொண்டர்களுக்கு வழக்கம் போல ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், மார்ச் 30ம் தேதி பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், அன்றைய தினமே பரப்புரையை தொடங்கிய நிலையில், பாதுகாப்பு சரியாக வழங்கவில்லை என்ற காரணத்தை முன்வைத்து பரப்புரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீடு திரும்பினார். தொடர்ந்து, சென்னையில் தியாகராய நகர் மற்றும் வில்லிவாக்கத்தில் பரப்புரை செய்யத் தவெக சார்பில் 4 மணி நேரம் வழங்க அனுமதி கோரப்பட்டது.
ஆனால், அந்த பகுதிகள் நெரிசலானவை என்பதால் காவல்துறை அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்குவது போன்ற கால அளவில் அனுமதியளித்தும், தவெக தரப்பு தாங்கள் கேட்ட அளவு அனுமதி வழங்கவில்லை என்ற காரணத்தை முன்வைத்து காவல்துறை மற்றும் திமுக மீது குற்றச்சாட்டுகளைக் கூறி அன்றைய தினப் பரப்புரையும் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில், திருச்சி கிழக்கு தொகுதியில் மனு தாக்கல் செய்த விஜய், அங்கு மட்டும் பரப்புரை செய்திருந்தார்.
இதை தொடர்ந்து, ஏப்ரல் 8ம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடியில் சாலைவலம் மற்றும் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து, ஏப்ரல் 9ம் தேதி கடலூரில் பரப்புரை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறையும் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், அன்றைய தினம் கடலூர் அருகில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறுகிறது என்ற காரணத்தைக் கூறி தவெக பரப்புரையை ரத்து செய்தது. இதை தொடர்ந்து, நேற்று காரைக்குடியில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, போதிய அளவு கூட்டம் வராததால் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல தாமதம் செய்த விஜய், பரப்புரைக்கு அனுமதி கொடுத்த இடத்தை சரியான நேரத்தில் அடைய முடியாத நிலையில், சைக்கிள் ஓட்டியும் ரோடு ஷோ செய்தும் உரை நிகழ்த்தாமலேயே திரும்பினார். இந்த நிலையில், கடலூரில் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற இருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் கடலூர் பரப்புரை ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து, நிர்வாக ரீதியான காரணங்களுக்காக கடலூர் பரப்புரை ரத்து செய்யப்படுவதாக தவெக தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று விஜய் கன்னியாகுமரியில் ரோடு ஷோ சென்று பரப்புரை செய்யவுள்ளார். அதேநேரம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் விஜய் பங்கேற்கும் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி தருமாறு தேர்தல் ஆணையத்திடம் தவெகவினர் மனு அளித்தனர்.
அதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் 25 நிபந்தனைகளோடு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவரப்பேட்டையில் நாளை பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி வழங்கியது. ஆனால், திடீரென நாளை நடைபெறுவதாக இருந்த விஜய்யின் பரப்புரை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.
விஜய் ஒருநாள் பரப்புரை சென்றால் அடுத்த நாள் ஓய்வு தேவைப்படுவதால்தான் தொடர்ந்து இரண்டு நாட்கள் பரப்புரைக்குச் செல்வதில்லை. அதனால்தான் தொடர்ந்து பரப்புரை ரத்து செய்யப்படுகிறது எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு பிரசாரத்திற்கும் இடையே நாள் கணக்கில் விஜய் விடுமுறை எடுப்பதைநெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்த பாணியில், முதல் அரசியல் தலைவர் விஜய்தான் என விமர்சித்தும் வருகிறார்கள்.
* ‘‘இப்போது யாரை கைகாட்டுவீர்கள் விஜய்?’’
இவ்வளவு நாளாக பரப்புரைக்குச் செல்லாமல் தவிர்க்க முதலில் திமுக அரசு அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது எனச் சொன்னார். தேர்தல் அறிவிப்பிற்குப் பிறகு திமுக அரசுக்கு ஆதரவான காவல்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க ஏராளமாக கட்டுப்பாடுகளையும் நெருக்கடியும் கொடுப்பதாகக் குற்றம்சாட்டி பரப்புரைக்கு செல்லாமல் தவிர்த்து, அதிகாரிகளை மாற்ற வழியுறுத்தித் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தார். இப்போது அதிகாரிகளையும் மாற்றிவிட்டது தேர்தல் ஆணையம். இப்போது, பரப்புரையை ரத்து செய்வதற்கு காரணமாக யாரை கை காட்டுவீர்கள் விஜய் எனச் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.
