×

ஒன்றிய அரசு சார்பில் தொடங்கப்பட்ட நெல்லை ராமையன்பட்டி கொள்முதல் நிலையத்தில் நெல் மூடைகள் தேக்கம்

*விவசாயிகள் கலெக்டர் அலுவலக வாசலில் ‘நூதன’ போராட்டம்

நெல்லை : நெல்லை ராமையன்பட்டியில் உள்ள ஒன்றியஅரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூடைகள் தேக்கம் காரணமாக கடும் பாதிப்பை எதிர்கொள்வதாக கூறி விவசாயிகள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லை அருகே ராமையன்பட்டியில் ஒன்றிய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.

இந்த நிலையத்தின் மூலம் ராமையன்பட்டி, நயினார்குளம், புதுக்குளம், கண்டியப்பேரி, தென்பத்து, கருப்பந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஆனால் கடந்த சில நாட்களாக இந்த நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் அங்கு ஏராளமான நெல் மூடைகள் தேங்கி காணப்படுகிறது. போதுமான சாக்கு வசதிகளும் இல்லை என புகார் கூறப்படுகிறது.

இதையடுத்து கண்டியப்பேரி நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் சண்முகராஜ், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் மாரியப்ப பாண்டியன் ஆகியோர் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

ஒரு மூடை நிறைய நெல்லை கொண்டு வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு வாசலில் தட்ட முயன்றனர். இப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதை தடுத்து நிறுத்தினர். பின்னர் கை நிறைய நெல் மணிகளை அள்ளிக்கொண்டு போராட்டம் நடத்தினர். இதனால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘ராமையன்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூடைகள் தேங்கி கிடக்கின்றன.

ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பணம் அளிக்கவில்லை. நெல்மணிகளை சேமிக்க சாக்குகளும் தரப்படுவதில்லை. ராமையன்பட்டி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடியாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும். தற்போது மாலை நேரங்களில் திடீரென மழை பெய்யும் சூழ்நிலையில் இந்த நெல் மூடைகள் சேதமடையும் நிலை உள்ளது.

அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூடைகளில் நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளது. எனவே, அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் நெல் மூடைகளை கொள்முதல் செய்துவிட்டு, உரிய தொகை அளிக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Ramayanpatti ,Union Government ,Paddy ,Paddy Collector ,
× RELATED வேலூரில் 85 வயது முதியவர்கள்,...