மயிலாடுதுறை: மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் வரும் 14ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மீன் இனப்பெருக்க காலம், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை, 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தடைக்காலம் அமலுக்கு வரும் முன்னர் கடலுக்கு சென்ற விசைப்படகுகள், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள படகுகள் அனைத்தும் வரும் ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் கட்டாயம் கரைக்கு திரும்பிட வேண்டும் என்று ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள படகுகளுக்கு வி.ஹெச்.எப், சாட்டிலைட் போன் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் தகவலை தெரிவித்து, உடனடியாக கரைக்கு திரும்பிட முன்கூட்டியே அறிவுறுத்த வேண்டும் என்று அனைத்து படகு உரிமையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
