புதுடெல்லி: பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை திருத்துவதற்கு அரசு முன்மொழிந்துள்ள நடவடிக்கை தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதற்கு சமமாகும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை திருத்துவதற்கான அரசின் நடவடிக்கை மற்றும் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பேசிய கார்கே, ‘‘பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்தி நாடாளுமன்றத்தில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பிரதமர் மோடி அரசு முன்மொழிந்துள்ள நடவடிக்கையானது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதற்கு சமமாகும். இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். முன்மொழியப்பட்டுள்ள இந்த திருத்தத்துக்கு தீவிரமான மற்றும் முழுமையான விவாதம் தேவை. இந்த விவகாரத்தில் ஒற்றுமையுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்க்கட்சியில் உள்ள மற்றவர்களுடன் இணைந்து காங்கிரஸ் கூட்டு உத்தியை வகுக்கும்.
ஏப்ரல் 16ம் தேதி முதல் ஏப்ரல் 18ம் தேதி வரை நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு பிரதமர் மோடி அரசு எடுத்துள்ள முடிவானது அரசியல் ஆதாயம் தேடும் ஒரே நோக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது. இந்த அரசியலமைப்பு திருத்த மசோதாவை அவசர அவசரமாக நிறைவேற்றுவதில் அரசு மிகுந்த ஆர்வம் காட்டுகின்றது. முன்மொழியப்பட்டுள்ள இந்த திருத்தங்கள் நாட்டின் தேர்தல் முறையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மையை கொண்டுள்ளன” என்றார்.
