புதுடெல்லி: கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி டெல்லியில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்கு கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதற்கிடையே நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மூன்று நபர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார்.
இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் தற்போது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்த யஷ்வந்த் வர்மா தனது பதவியை திடீரென நேற்று ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ கடிதத்தை அவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை அனைத்தும் கைவிட்ட நிலையிலும், தனது பதவி நீக்கத்தை தவிர்க்கவும் நீதிபதி யஷ்வந்த் வர்மா இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதையடுத்து அவரை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் முடிவுக்கு வந்துவிடும் என்று மக்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
