ஈரான் போர் நிறுத்தத்திற்கு மத்தியில் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 254 பேர் பலி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம்

பெய்ரூட்: ஈரான் போர் நிறுத்தத்திற்கு மத்தியில் நேற்று லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 254 பேர் பலியானார்கள். ஈரானுடனான போரை இரண்டு வார காலத்துக்கு நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பை தொடர்ந்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் போர் நிறுத்தத்தை உறுதிபடுத்தினார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் குழு நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் லெபனானுக்கும் இந்த போர் நிறுத்தத்திற்கும் தொடர்பில்லை என்றும் லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். அதன்படியே வெறும் 10 நிமிட இடைவெளியில் 100க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் லெபானை தாக்கியுள்ளது. இதில் 254 பேர் கொல்லப்பட்டனர். 1,100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மாயமானவர்கள் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களுக்கான தேடுதல் பணிகளும் நடந்து வருகிறது.

மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த கொஞ்ச நேரத்திலேயே இஸ்ரேல் இந்த தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் இல்லை என சொல்லியே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாகவே ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. முதலில் நடந்த தாக்குதல் சைடா நகரின் ஒரு கஃபேயை தாக்கியது. அதில் 8 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர். மற்றொரு ஏவுகணை பால்பெக்கில் இறுதி சடங்கில் நடந்த இடத்தை தாக்கியுள்ளது.

அதில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். இது பெரும் சேதத்தையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தின. பல இடங்களில், மீட்பு குழுக்கள் காயமடைந்தவர்களை மீட்டன. இந்த தாக்குதலுக்கு லெபனான் அதிபர் ஜோசப் அவூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘இந்த தாக்குதல்களை மிருகத்தனமானது. இன்று, இஸ்ரேல் மீண்டும் தனது ஆக்கிரமிப்பை தொடர்கிறது. அமைதி முயற்சிகளையும் அப்பட்டமாக மீறி, ஒரு மிக பெரிய படுகொலையை செய்கிறது” என்று சாடியுள்ளார். இதற்கிடையே லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்தால் தற்காலிக போர் நிறுத்தத்திலிருந்து ஈரான் விலக நேரிடும் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

* ஹிஸ்புல்லா முக்கிய தலைவர் பலி
தலைநகர் பெய்ரூட் மீது நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில் ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசெமின் உதவியாளர் ஒருவரை கொன்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர் காசெமின் செயலாளரும் மருமகனுமான அலி யூசுப் ஹர்ஷி என்றும் இஸ்ரேல் அடையாளம் காட்டியுள்ளது. இது தொடர்பாக ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்கள் போர் நிறுத்தத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

* ஈரான் போரினால் உணவு விலை உயர்வு
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகிய மூன்று அமைப்பின் தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், ‘‘மத்தியக்கிழக்கு போர் அந்த பிராந்தியத்திலும் அதற்கு வெளியிலும் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களையும் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு வருகின்றது. நவீன வரலாற்றிலேயே உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய இடையூறுகளில் ஒன்றை இது ஏற்கனவே தூண்டிவிட்டுள்ளது. எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களின் விலைகளில் ஏற்படும் கடும் உயர்வுடன் போக்குவரத்து தடைகளும் சேரும்போது அது தவிர்க்க முடியாமல் உணவு விலையேற்றத்திற்கும் உணவு பாதுகாப்பின்மைக்கும் வழிவகுக்கும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

* யுரேனியம் செறிவூட்டும் உரிமை
அமெரிக்கா உடனான எந்தவொரு போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கும், யுரேனியம் செறிவூட்டும் தெஹ்ரானின் உரிமையைப் பாதுகாப்பது அவசியமாகும் என்று ஈரான் அணுசக்தி முகமையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

* அமெரிக்கா-ஈரான் நாளை பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை
மேற்கு ஆசியாவில் நிலவும் பலவீனமான போர் நிறுத்தத்தை வலுப்படுத்தவும், பதற்றம் அதிகரிப்பதை தடுக்கவும் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த நேரடி பேச்சுவார்த்தையை நாளை நடத்துவதற்கு பாகிஸ்தான் தயாராகிறது. பேச்சுவார்த்தைக்காக இருநாட்டு பிரதிநிதிகளும் இஸ்லாமாபாத் வந்தடைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

* லெபனான் மீது தாக்குதல் தொடரும்
ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தனது ராணுவ தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தி உள்ளார். இஸ்ரேலியப் படைகள் பலம், துல்லியம் மற்றும் உறுதியுடன் ஹிஸ்புல்லா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இஸ்ரேலிய பொதுமக்களுக்கு எதிராக செயல்படும் எவரையும் நாங்கள் தாக்குவோம் என்று நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

* ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகள்
ஈரானின் துணை ராணுவப்படையானது போரின்போது ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் கண்ணிவெடிகளை பதித்துள்ளதாக குறிப்பிடும் ஒரு வரைபடத்தை ஈரானின் செய்தி நிறுவனங்கள் நேற்று வெளியிட்டன. மொத்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் 20சதவீதம் கடந்து சென்ற அந்த நீர்வழிப்பாதையின் மீது பாரசீக மொழியில் ஆபத்தான பகுதி என குறிப்பிடப்பட்ட வட்டம் காட்டப்பட்டது. லராக் தீவுக்கு அருகில் உள்ள ஈரானின் பிரதான நிலப்பகுதிக்கு அருகில் உள்ள நீர்வழியாக கப்பல் பயணிக்க வேண்டும் என்றும் அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Related Stories: