நெல்லையில் மீன்பிடி வலையில் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கும் போராடிய மலைப்பாம்பு ஒன்றிற்கு நெல்லை கால்நடை துறை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நியதில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மருத்துவர்கள் அதன் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த சிலர் வலை விரித்துள்ளனர். இதில் மீன்களுக்கு விரித்த வலையில் சிக்கிய மலைப்பாம்பு படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் மீட்க முயற்சித்து உள்ளனர். ஆனால் வலையில் சிக்கி உயிருக்குத் தத்தளித்து கொண்டிருந்தது விஷம் கொண்ட விரியன் பாம்பு என தவறாக ருதி உள்ளனர்
எனவே அந்த முயற்சியை பாதியிலேயே கைவிட்டு பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீன்பிடி வலையில் சிக்கி காயமடைந்தது சாதாரண வகை பாம்பு அல்ல, மலைப்பாம்பு என்பதை உறுதி செய்தனர். குறிப்பிட்ட பாம்பின் தலைக்குக் கீழே சுமார் ஒரு அடி தூரத்தில் மீன்பிடி வலை மிகவும் இறுக்கமாகச் சுற்றியிருந்ததால், அந்த பாம்பின் தோல் பல இடங்களில் கிழிந்து தசைகள் வெளியே தெரிந்துள்ளது. இப்படி பலத்த காயங்களுடன் பரிதவித்த பாம்பை பத்திரமாக மீட்டனர்.
இந்த வனச்சரக அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் உடனடியாக நெல்லை ராமையன்பட்டியில் உள்ள நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் எட்வின் வழிகாட்டுதலின்படி, துறை தலைவர் டாக்டர் ஷிஜு சைமன் மற்றும் உதவி பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணவேணி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
பின்னர் உடனடியாக படுகாயமடைந்த பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 1 வாரத்திற்கு அந்த பாம்பின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து உரிய மருந்துகள் வழங்கினர். இன்னும் சில நாள் கண்காணிப்பிற்கு பிறகு அந்த பாம்பு இயல்பு நிலைக்கு திரும்பியவுடன், அது வனப்பகுதியில் கொண்டுவிடப்படும் என்று வனதுறையினர் கூறி உள்ளனர். மனிதர்களுக்கு செய்வதை போன்று கால்நடை மருத்துவர்கள் மலைபாம்பிற்கு அறுவைசிகிச்சை செய்த் வதன் உயிரை காப்பாற்றி இருக்கும் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
