சென்னை: மூன்றாம் தர பேச்சாளரைப் போல பேசும் எடப்பாடி நல்ல மனநல மருத்துவரை பார்க்கவேண்டும் என்று திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு கூறியுள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவர் அணி தலைவர் டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் நேற்று அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.
கடந்த ஒரு வார காலமாகவே அவருக்கு இது ஒரு பழக்கமாகிவிட்டதை நாம் பார்த்து வருகிறோம். முதலில், துணை முதல்வரை ‘பால்டாயில்’ என்று சொல்லி ஒரு வாரம் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை கொரோனா காலத்தில் ‘போய் சேர்ந்திருப்பார்’ என்கிற மிகவும் இழிவான சொற்களைப் பயன்படுத்திப் பேசினார். நேற்று ஒரு பெண்ணின் மாண்பைக் கூடக் கருதாமல் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை தரம் தாழ்த்திப் பேசியிருக்கிறார்.
இதிலிருந்து எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் என்பதுதான் தெரிகிறது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது இடம் கூட கிடைக்காது மூன்றாவது இடத்திற்குப் போய்விடுவோம் என்கிற பயத்தின் காரணமாக தரம் கெட்ட வார்த்தைகளை எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இது அவருக்கு மட்டுமே பழக்கப்பட்ட விஷயம் கிடையாது. அவர் கட்சியைச் சார்ந்த சி.வி.சண்முகம் ஏற்கனவே பெண்களை இழிவாகப் பேசினார், இலவசமாக பொண்டாட்டிகளைக் கொடுப்பார்களா என்கிற அளவுக்கு தரம் தாழ்ந்து பேசினார்.
அதே மாதிரி திண்டுக்கல் சீனிவாசன் பாவாடை என்கிற வார்த்தையைப் பயன்படுத்திப் பேசினார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒல்லியான பெண்களையும் குண்டான பெண்களையும் ஒப்பிட்டு உருவ கேலி செய்து பேசினார். திமுகவை சேர்ந்த அனைத்து மகளிரும் இப்படியான தரம்கெட்ட பேச்சுகளைக் கண்டிக்கிறோம். உருவக் கேலி செய்வது என்பது மிக தரம் தாழ்ந்த விஷயம். அரசியல் களத்தில் எதைப் பேச வேண்டும் என்பதற்கு ஒரு வரமுறை இருக்கிறது.
உணர்ச்சிவசப்பட்டு எப்போதாவது ஓரிரு வார்த்தைகளைத் தவறாகப் பேசுவது இயல்பாக நடக்கக்கூடியதுதான் என்றாலும், அந்த தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பதுதான் நாகரிகமான செயல். மணிப்பூர் கலவரத்தில் பெண்களை இழிவுபடுத்திய பாஜவுடன் கூட்டணி வைத்திருப்பதால்தான் இவருக்கும் இத்தகைய புத்தி வந்திருக்கிறது. என்.டி.ஏ கூட்டணியை நான் சென்ஸ் டெல்லி அலையன்ஸ் என்று தான் சொல்ல வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை நோ டெவலப்மென்ட் அலையன்ஸ் என்றார்.
எடப்பாடி பழனிசாமி ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகித் தன்னை பரிசோதித்துக் கொள்வது நல்லது. தனிமனித தாக்குதல், பெண்களை தரக்குறைவாகப் பேசுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் புகார் அளிக்க தயாராக இருக்கிறோம். முன்னாள் முதல்வர் என்ற தகுதியை மறந்து மூன்றாம் தர பேச்சாளரைப் போல அவர் பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். நிச்சயமாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்போம். துணை முதல்வரை பற்றி அவர் செல்லும் இடமெல்லாம் அவதூறாகப் பேசி வருகிறார்.
மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும். பெண்களுக்கு எதிராகப் பேசுவது குறித்து மகளிர் ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமொழி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, பெண்களின் உரிமைகளை முன்னெடுப்பவர். பாஜவுடன் கைகோர்த்துள்ள அதிமுகவினர் பெண்களை இழிவுபடுத்துவதையே வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
