ஆட்டோவில் 500 கிலோ குட்கா கடத்தியவர் கைது

கோவை, ஏப். 9: கோவையில் ஆட்டோவில் கடத்தப்பட்ட 500 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து அதை கடத்தி வந்தவரை கைது செய்தனர். கோவையில் கஞ்சா, போதை பொருள் மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாரும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், நேற்று கோவை பூசாரிபாளையம் ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி அதில், இருந்த வாலிபரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். ஆட்டோவை சோதனை செய்ததில், அதில் குட்கா இருந்தது.

விசாரணையில், அவர் வெளி மாநிலங்களில் இருந்து தடைசெய்யப்பட்ட குட்காவை அதிகளவில் வாங்கி, கோவையில் பதுக்கி விற்பனைக்காக முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சுமார் 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் குட்காவை கடத்தி வந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இஸ்ரவேல் (40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: