போர்நிறுத்தம் அமலுக்கு வந்த சூழலில், ஈரானின் லவான் தீவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் மீண்டும் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை ஏவியதால் பரபரப்பு நிலவுகிறது. இந்த சூழலில் எப்போதும் ஏமாற்றுவதையே வழக்கமாக வைத்துள்ள அமெரிக்காவின் போர்நிறுத்த வாக்குறுதிகளை நாங்கள் நம்பவில்லை என தெரிவித்து ஈரான் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இனி ஈரான் மீதான எந்தவொரு சிறிய அத்துமீறலுக்கும், முன்பை விட அதிக மீரியத்துடன் தாக்குதல் நடத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைக்கால போர் நிறுத்தத்தை பயன்படுத்தி ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்காவும், ஈரானும் 2 வார கால போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள சில மணி நேரங்களில் ஈரானில் இருக்கும் இந்தியர்கள் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி அங்கிருந்து விரைவாக வெளியேற கேட்டு கொண்டுள்ளது.
அதே போல தூதரகம் பரிந்துரைத்துள்ள வழித்தடத்தை பயன்படுத்தி மட்டுமே அந்நாட்டை கடந்து வர வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஈரானில் உள்ள இந்தியத் தூதரகமும், அங்கிருக்கும் இந்தியக் குடிமக்கள் ஈரானிலிருந்து விரைவாக வெளியேறுமாறு அறிவுறுத்தலை வெளியிட்டது.
ஈரானில் இருந்து வெளியேறும் நடவடிக்கையானது தூதரகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. “தூதரகத்துடன் முன் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு இன்றி, எந்தவொரு சர்வதேச தரைவழி எல்லையையும் அணுக ஈரானில் இருக்கும் இந்தியர்கள் முயற்சி மேற்கொள்ள கூடாது என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. தூதரகத்தின் அவசர உதவி எண்கள் இங்கே – அலைபேசி எண்கள்: +989128109115; +989128109102; +989128109109; +989932179359. மின்னஞ்சல்: cons.tehran@mea.gov.in,” என்று அது மேலும் தெரிவித்தது.
