*உடனுக்குடன் பணம் கிடைப்பதால் மகிழ்ச்சி
காவேரிப்பாக்கம் : ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் நவரைப் பருவத்தில் விவசாயம் செய்த நெற்பயிர்களை தற்போது அறுவடை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதேபோல் காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள நெல் வியாபாரிகளும் களத்தில் இறங்கி, விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் அடுத்த சொர்ணவாரி பருவத்திற்கு விவசாயம் செய்ய தயாராகி வருகின்றனர்.
மேலும் விவசாயிகள் நவரைப் பட்டத்தில் கோ-51, ஏடிடி-36 உள்ளிட்ட நெல் ரகங்கள் அறுவடை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, காவேரிப்பாக்கம் அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளில் ஈரப்பதம் இருப்பதால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள நெல் களத்தில் நெல் உலர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நெல்லின் ஈரப்பதம் குறைந்தால், கூடுதல் விலைப்போகும் என்பது விவசாயிகள் நம்பிக்கையாக உள்ளது. இதனால் ஈரப்பதமான நெல் மணிகளை, வெயிலில் உலர்த்தி, அதனை விற்பனைக்காக ஓரிடத்தில் குவியலாக வைத்து வருகின்றனர்.தற்போது காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு அதிகப்படியான வியாபாரிகள் வர தொடங்கி உள்ளனர்.
இதனால் விவசாயிகள் நெல் மூட்டைகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, வியாபாரிகளிடம் இருந்து பணம் பெற்று விவசாயிகளுக்கு உடனுக்குடன் தருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
