சேலம் கலெக்டர் அலுவலக ரவுண்டானாவில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பசுமை பந்தல்

*வாகன ஓட்டிகள் வரவேற்பு

சேலம் : வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சேலம் கலெக்டர் அலுவலக ரவுண்டானா போக்குவரத்து சிக்னலில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, தினந்தோறும் சராசரியாக 98 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி வருகிறது.

நண்பகல் நேரத்தில் அனல்காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் சாலையோரம் விற்பனை செய்யப்படும் தர்பூசணி, நுங்கு, பதநீர், கம்மங்கூழ், கரும்பு ஜூஸ், வெள்ளரி உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வருகின்றனர்.சேலம் கலெக்டர் அலுவலக ரவுண்டானாவில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சிகப்பு சிக்னல் விழும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நின்று விட்டு, பச்சை சிக்னல் விழுந்ததும் புறப்பட்டு செல்வார்கள்.

இந்நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சிக்னலில் நீண்ட நேரம் நிற்பதலால் அனைவருமே அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் வகையில், சேலம் மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் முக்கிய சிக்னல் உள்ள இடங்களில் பசுமை பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, முற்கட்டமாக சேலம் செவ்வாய்பேட்டை சாலையில் இருந்து கலெக்டர் அலுவலக ரவுண்டானா வரும் வழியில் அரசு மருத்துவமனை எதிரே சுமார் 30மீட்டர் தொலைவுக்கு பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்வோர் சற்று நேரம் பசுமை பந்தலில் தங்களை ஆசுவாச படுத்திக்கொண்டு செல்கின்றனர். இந்த பசுமை பந்தல் என்பது வாகன ஓட்டிகளிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பெரியார் மேம்பால இறக்கத்திலும் பசுமை பந்தல் அமைக்கவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதேபோல், அஸ்தம்பட்டி ரவுண்டானா, அழகாபுரம் உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் பசுமை பந்தலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: