இதுதான் பைனல்… மேற்குவங்கத்தில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம்

மேற்குவங்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 7.66 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது, எஸ்ஐஆர் பணிக்கு பிறகு 90.83 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்து உள்ளது. தற்போது மொத்த நீக்கங்களின் விகிதம் 11.85 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட 60.06 லட்சம் வாக்காளர்களில், 27.16 லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள், தற்போது நிறைவடைந்த நீதிபதிகள் ஆய்வுக்கு பிறகு நீக்கப்பட்டுள்ளன. 32.68 லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில்தான் அதிகபட்ச எண்ணிக்கையிலான நீக்கங்கள் பதிவாகியுள்ளன. அங்கு 11.01 லட்சம் பெயர்களில் 4.55 லட்சத்திற்கும் அதிகமானவை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 5.91 லட்சம் வாக்காளர்களில் 3.25 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டனர்.

இதேபோல், மால்டா மாவட்டத்திலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 8.28 லட்சம் வாக்காளர்களில் 2.39 லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2.23 லட்சமாகவும், பூர்பா பர்தமான் மாவட்டத்தில் 2.09 லட்சமாகவும், நாடியா மாவட்டத்தில் 2.98 லட்சமாகவும்உள்ளது.

முதல்வர் மம்தா போட்டியிடும் கொல்கத்தா நகரில் உள்ள பவானிப்பூர் சட்டமன்றத் தொகுதியில் 28,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த வாக்காளர் பட்டியலில் ஏதேனும் மாற்றம் ஏற்படுவது என்பது, உச்ச நீதிமன்றத்திடமிருந்து ஏதேனும் புதிய அறிவுறுத்தல்கள் பெறப்பட்டால், அவற்றை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

* பாஜவின் திட்டமிட்ட சதி
வாக்காளர் பட்டியலில் 90 லட்சம் பேர் நீக்கப்பட்டது பா.ஜவின் திட்டமிட்ட சதி என்று முதல்வர் மம்தா தெரிவித்து உள்ளார். நாடியா மாவட்டத்தின் சாக்தஹாவில் நடந்த பேரணியில் உரையாற்றிய அவர், இந்த நீக்கங்கள் தற்செயலானவையோ அல்லது நிர்வாக ரீதியானவையோ அல்ல. இது திட்டமிட்ட சதி. ஏன் இந்தப் பாகுபாடு? . இது மக்களுக்குப் புரியாது என்று நினைக்கிறீர்களா? இந்தத் தேர்தல் மக்களின் ஜனநாயகம், மொழி மற்றும் மரியாதையைக் காப்பாற்றுவதற்கான ஒரு போராட்டம். அப்போதுதான் உங்களை யாரும் ஒருபோதும் அந்நியர் என்று அழைக்க முடியாது என்றார்.

Related Stories: