புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை பகுதியில் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய வெள்ளை காலர் தீவிரவாத குழு குறித்த விசாரணையின்போது அரியானாவின் பரிதாபாத்தில் இயங்கி வரும் அல் ஃபலா பல்லைக்கழகம் விசாரணை முகமைகளின் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்தது.
இதனை தொடர்ந்து நடந்த விசாரணையில் கல்வி நிறுவனங்களின் அங்கீகார நிலையை தவறாக சித்தரித்து கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களை ஏமாற்றியதாக பல்கலைக்கழக தலைவர் ஜவாத் அமகது சித்திக்கிற்கு எதிராக பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சித்திக் கைது செய்யப்பட்டார். முன்னதாக பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான சுமார் ரூ.140கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் கட்டிடத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருந்தது.
இந்நிலையில் சித்திக்கிற்கு எதிராக பண மோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக அவரது சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. டெல்லியின் ஜாமியா நகரில் உள்ள ஒரு வீடு, பரிதாபாத்தில் உள்ள விவசாய நிலம் மற்றும் பல்வேறு வங்கிக்கணக்குகளில் உள்ள வைப்புத் தொகைகள் என மொத்தம் ரூ.39கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
