அசாமின் பராக் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள பதர்கண்டி, ஸ்ரீபூமி மற்றும் ஹைலகண்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது; காங்கிரஸ் கட்சி இப்பகுதியில் சட்டவிரோத குடியேறிகளுக்கு அடைக்கலம் அளித்து வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் ஊடுருவல்காரர்கள் நாட்டில் தங்குவதைத் தடுப்பதால், காங்கிரஸ் அச்சட்டத்தை எதிர்க்கிறது.
வங்காளதேசத்திலிருந்து துன்புறுத்தப்பட்டு வரும் இந்துக்கள் இச்சட்டத்தின் வரம்பிற்குள் வருகின்றனர். இதை காங்கிரஸ் எதிர்க்கிறது; ஆனால் முஸ்லிம் ஊடுருவல்காரர்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. இந்தியா ஒரு ‘தர்மசாலை’ (விருந்தினர் இல்லம்) அல்ல. நமது நாட்டில் ஊடுருவல்காரர்களுக்கு இடம் இல்லை. மேற்குவங்கம், அசாம், திரிபுராவில் உள்ள அனைத்து ஊடுருவல்காரர்களும் அவரவர் நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள். ஊடுருவல்காரர்களின் உதவியுடன் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரஸ் விரும்புகிறது. ராகுல்காந்தியின் மூன்று தலைமுறையினர் முயன்றாலும் அசாம் மாநிலத்தை ஊடுருவல்காரர்களின் பூமியாக மாற்ற முடியாது.
எஸ்ஐஆர் மூலம் ஊடுருவல்காரர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு வருவதால் மம்தாவுக்கும், ராகுலுக்கும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அழுது புலம்பட்டும், மார்பில் அடித்துக்கொண்டு கதறட்டும்; ஆனால் ஊடுருவல்காரர்கள் வெளியேறியே ஆக வேண்டும். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து, அனைத்து காங்கிரஸ் தலைவர்களின் பொது மதிப்பும் குறைந்துவிட்டது. இவ்வாறு பேசினார்.
