புதுடெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் நீதித்துறையின் ஊழல் என்ற பகுதி இடம்பெற்று இருந்தது. இதில் நீதிமன்றங்களின் படிநிலை, நீதிக்கான நடைமுறைகளைத் தாண்டி, நீதித்தறையின் ஊழல் மற்றும் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவை குறித்து குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த பாடத்திட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்குறிப்பிடப்பட்ட அந்த பாடநூலின் அச்சிடப்பட்ட அல்லது இணையவழிப் பிரதிகளைப் பயன்படுத்துவதற்கும் முழுமையாக தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது. உச்சநீதிமன்ற கண்டனத்துக்கு ஆளானதையடுத்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தனது பாடத்திட்ட குழுவை மாற்றியமைத்துள்ளது.
இதன்படி என்சிஇஆர்டியின் தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் -கற்றல் பொருட்கள் குழுவில் 22 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் இருந்து மூன்று உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஐஐடி காந்திநகரின் முன்னாள் பேராசிரியர் மைக்கேல் டானினோ, சென்னை கொள்கை ஆய்வுகள் மையத்தின் தலைவர் ஸ்ரீனிவாஸ், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் முன்னாள் தலைவர் (மறைந்த) விவேக் தேப்ராய் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து ஐஐடி சென்னை இயக்குனர் வி.காமகோடி, இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் ரகுவேந்திர தன்வார், இந்திய சட்டப்பள்ளி தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஆர் வெங்கட ராவ் மற்றும் மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறுப்பு இணை இயக்குனர் அமரேந்திர பிரசாத் பெஹேரா ஆகியோர் இடம்பெற்றுள்ள 20 பேர் கொண்ட புதிய பாடத்திட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவை வலுப்படுத்தும் நோக்கத்திலேயே மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
