ஆந்திராவின் அதிகாரப்பூர்வ தலைநகரமாக அமராவதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார். இது தொடர்பாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் “அமராவதி – ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரம்,” என்று பதிவிட்டுள்ளார். அமராவதி, ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரமாக அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற நாள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் எக்ஸ்-ல் வெளியிட்டுள்ள பதிவில் “ஆந்திரப் பிரதேசம் இனி தலைநகரம் இல்லாத மாநிலமாக இருக்காது; அதன் எதிர்காலமும் நிச்சயமற்ற நிலையில் சிக்கிக் கொண்டிருக்கவில்லை,” என்று ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். அமராவதி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற நாளாக, ஏப்ரல் 6-ஆம் தேதி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலமும், இந்திய அரசாங்கம் அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டதன் மூலமும், அதனைத் தொடர்ந்து மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததன் மூலமும் ஆந்திர பிரதேச மக்களின் நீண்டகாலக் கனவு இறுதியாக நிறைவேறியுள்ளது என்று பவன் அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார். இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணம் சாத்தியமாக உறுதுணையாக இருந்த, மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கும், பிரதமர் மோடி அவர்களுக்கும் மற்றும் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை பவன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தருணம், தியாகங்களைச் செய்த விவசாயிகளுக்கும், தங்கள் உறுதியில் சற்றும் தளராமல் நின்ற மக்களுக்கும் சொந்தமானது. மாநிலப் பிரிவினைக்குப் பிந்தைய 12 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, ஆந்திரப் பிரதேசம் இறுதியாகத் தனக்கான தலைநகரத்தை இந்திய அரசின் மூலம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தின் நிச்சயமற்ற சூழலையும் இடையூறுகளையும் கடந்து, மக்களின் தலைநகரான அமராவதியை உருவாக்க ஒன்றிணைவோம்; இதன் மூலம் வருங்காலத் தலைமுறையினருக்கான வலுவான அடித்தளத்தை அமைத்து, நமது மாநிலத்தை ‘ஸ்வர்ண ஆந்திரா 2047’ (பொற்கால ஆந்திரா 2047) எனும் தொலைநோக்கு இலக்கை நோக்கி வழிநடத்துவோம் என்றும் தனது மாநில மக்களுக்கு பவன் கல்யாண் அழைப்பு விடுத்து உள்ளார்.
இதனிடையே ஆந்திர தலைநகராக அமராவதி அங்கீகரிக்கப்பட்டதை அம்மாநில அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. ஆந்திர தலைநகராக அமராவதி நேற்று அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்று அம்மாநில அரசு கூறி இருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பிற்காக ஜனாதிபதிக்கு, மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். இதன் மூலம் ஆந்திரமகளின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது என்றும், நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற உறுதுணையாக இருந்த பிரதமர் மோடி மற்றும் எம்.பி-க்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த தலைநகராக அமராவதியை உருவாக்குவதே இலக்கு என்றும் சந்திரபாபு நாயுடு கூறி இருக்கிறார்.
